டிசம்பர் 26‍-ம், சுனாமியும்.. கொஞ்சம் கிரிக்கெட்

டிசம்பர் 26, 2008 இன்றுடன் தமிழ்நாட்டின் தெற்கு கடலோர மாவட்டங்களை சுனாமி தாக்கி 4 வருடம் ஆகிறது. நிஷாவும், மாலாவும் வருஷத்துக்கு ஒரு முறை தமிழ்நாட்டை உலுக்கு உலுக்கினாலும் தமிழர்கள் அதை ஒரு வாரம் நியாபகம் வைத்திருந்தாலே பெரிய விஷயம். ஏரியில் இருக்கும் மக்களும், வெள்ள நிவாரணத் தொகை வழங்கும் அதிகாரிகளும், அதை வாங்குவதற்கு அலையும் மக்கள் மட்டும் விடாமல் குறைந்தது ஒரு மாதம் நியாபகம் வைத்து இருப்பார்கள்.

ஆனால் சுனாமி அப்படியல்ல. டிசம்பர் 26, 2004 அதிகாலையில் ஒரு பேரலை வந்து தாக்கியபோது யாருக்கும் தெரியாது அதனுடைய பெயர் "சுனாமி" என்று. அடுத்த நாள் பேப்பர்களில் கூட அதை கடல் கொந்தளிப்பு, ஆழிப்பேரலை என்று மட்டும் அழைத்தார்கள். இரண்டு நாள் கழித்து, தினத்தந்தி மட்டும் இந்த கடல் கொந்தளிப்பின் பெயர் "டிசுனாமி (Tsunami)" என்று பெயர் வைத்ததாக எனக்கு ஞாபகம். கடைசியில் அதன் பெயர் மருவி இல்லை உண்மையான பெயரான சுனாமிக்கு வந்தது. கமலஹாசன் மட்டும் தீர்க்கதரிசனமாக "அன்பே சிவம்" படத்தில் சுனாமி வந்து அப்பாவை தூக்கிட்டு போயிட்டதாக சொன்னார். (அந்த பெருமை டையலாக் ரைட்டர் மதனை சேருமா இல்லை கமல் தானா??)
நான் அந்த சமயம் இன்ஜினியரிங் மூன்றாவது வருடம் படித்துக் கொண்டிருந்தேன். செமஸ்டர் லீவுக்காக நான் ஊரில் பெரியப்பா வீட்டில் இருந்தேன். பெரியப்பாவின் மகள் சென்னை பாலவாக்கத்தில் மாமனார் வீட்டில் இருந்தார். நாங்கள் காலையில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும்போது சென்னையில் இருந்து போன். அக்கா கால் பண்ணி கடல் தண்ணியெல்லாம் ஊருக்குள் வந்துவிட்டது, கீழே கிரவுண்ட் ஃப்ளோர் ஃபுல்லா தண்ணி வந்துவிட்டது என்று அழுதுகொண்டே சொல்லிக் கொண்டிருந்தனர். நாங்கள் அவர்களை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் "எல்லாரும் மாடியில் போய் இருந்துகோங்க, வீட்டுக் கத்வு, ஜன்னல் என கீழ் ஃப்ளோரில் எல்லாத்தையும் மூடிவிட்டுப் போங்க" என்று எங்களால் முடிந்த அளவு சமாதானபடுத்திக் கொண்டு இருந்தோம். அன்னைக்கு முழுவது சன் நியூஸ் தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்தோம். நல்ல வேளை, வீட்டினுள் கொஞ்சம் தண்ணீர் மட்டும் புகுந்தது. மற்றபடி அக்கா வீட்டில் பெரிய சேதம் ஒன்றும் ஆகவில்லை.

நியூ இயர் முடிந்து நாங்கள் காலேஜ்க்கு போனோம். என்னுடன் படித்த ஃபைனல் இயர் சீனியர்ஸ் எல்லாம் அந்த டைம் சென்னையில் ப்ராஜெக்ட் பண்ணிக் கொண்டு இருந்தனர். அப்போது நாங்கள் சில சீனியர்களுடன் ப்ராஜெக்ட் எக்ஸ்பீரியன்ஸ் பற்றி விசாரித்துக் கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் சொன்னது திடுக்கிட வைத்தது. சுனாமி வருவத்ற்கு ஒரு நாள் முன்னால் 25-ம் தேதி சாயங்காலம் அவர்கள் அனைவரும் பீச்சில் தான் இருந்தனராம். அதுவும் அன்று ஞாயிற்றுகிழமை வேறு. பீச்சில் அலைமோதும் கூட்டம். ஒரு 12 மணிநேரம் முன்னால் வந்து இருந்தால், சென்னையே பாதி காலி ஆயிருக்கும் என்று பயந்து சொன்னார்கள். அவர்கள் கண்களில் இன்னும் அந்த பயம் இருந்தது.

நாகை, கடலூர் மாவட்டங்களில் பெரிய அளவு உயிர்சேதம் ஏற்பட்டது. திருச்செந்தூர், ராமேஸ்வரம், தூத்துக்குடியில் அதிக அளவு இழப்பு ஏற்படவில்லை, இலங்கை காப்பாற்றிவிட்டது என்று பேப்பரில் படித்ததாக நியாபகம்.

இயற்கை இப்படியெல்லாம் தாக்கும் என்று தமிழக மக்கள் தெரிந்து கொண்டது டிசம்பர் 26, 2004-ல் இருந்து தான்.

ஆனால் இன்று எத்தனை பேருக்கு இதே நாளில் தான் சுனாமி தாக்கியது என்று நினைவில் இருக்கும்? சென்னை பீச்சில் பொறித்த மீன் விற்றுக் கொண்டிருப்பவருக்குக் கூட நினைவில் இருக்குமா என்பது சந்தேகமே!


****************************

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசைப் பட்டியலில் இந்தியா 2‍-வது இடத்திற்கு முன்னேறி விட்டது. இது ஒட்டு மொத்த இந்திய அணிக்கு கிடைத்த வெற்றி. இன்னும் தென் ஆப்பிரிக்காவை ஒரு கை பார்த்துவிட்டால் இந்தியா தான் கிரிக்கெட் உலகின் முடிசூடா மன்னன்.

ஆஸ்திரேலியாவின் சிட்னி மார்னிங் ஹெரால்ட் நியூஸ்பேப்பர் தோனியை இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியின் கேப்டனாக அறிவித்துள்ளது. இந்த ஆண்டில் டெஸ்ட் வீரர்கள் செயல்பட்ட விதத்தை வைத்து கனவு டெஸ்ட் அணியை அறிவித்துள்ளது சிட்னி மார்னிங் ஹெரால்டு. ஆண்டுதோறும் இதுபோன்ற அணியை அது தேர்வு செய்து அறிவிக்கும்.

இந்தியாவிலிருந்து தேர்வு செய்யட்ட மற்றுமொரு வீரர் கவுதம் கம்பீர். சமீப காலமாக இவரின் கிரிக்கெட் மீது கொண்டுள்ள வெறி வியக்கத்தக்கது. ஆஸ்திரேலியா, இங்கிலாந்து பௌலர்களை வெறுப்பின் உச்சியில் உட்கார வைத்து விட்டார். இவர் கோபத்தை மட்டுக் கொஞ்சம் கட்டுப்படுத்திக் கொண்டால் மிகச் சிறந்த எதிர்காலம் உண்டு.

ஹெரால்டு அணி - டோணி (கேப்டன்-விக்கெட் கீப்பர்), ஸ்மித் (தெ.ஆ), கம்பீர் (இந்தியா), ஹசீம் அம்லா (தெ.ஆ), கெவின் பீட்டர்சன் (இங்கிலாந்து), சிவ்நரைன் சந்தர்பால் (மே.இ. தீவு), ஏப் டி வில்லியர்ஸ் (தெ.ஆ), ரியான் சைட்பாட்டம் (இங்கிலாந்து), டேல் ஸ்டெயின் (தெ.ஆ), மிட்சல் ஜான்சன் (ஆஸ்திரேலியா), அஜந்தா மென்டிஸ் (இலங்கை).

5 comments:

Anonymous said...

வர வர அருமையாக எழுதி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்

கணேஷ் said...

//வர வர அருமையாக எழுதி வருகிறீர்கள். வாழ்த்துக்கள்//

மிக்க நன்றி முருகா..
வருகைக்கும் பாராட்டுக்கும்..

இராகவன் நைஜிரியா said...

நண்பரே.. சுனாமியால் பாதிக்கபட்ட நிறைய பேருக்கு அந்த நினைவுகள் இன்றும் மறக்கவில்லை.

சுனாமி அன்று கடற்கரையில் இருந்து, உயிர் மீண்டு வந்த என் நண்பர் இன்று அதைப்பற்றி பேசினாலே அவருடைய அதிர்ச்சியை புரிந்து கொள்ள முடிகின்றது..

கணேஷ் said...

@இராகவன், நைஜீரியா

//சுனாமி அன்று கடற்கரையில் இருந்து, உயிர் மீண்டு வந்த என் நண்பர் இன்று அதைப்பற்றி பேசினாலே அவருடைய அதிர்ச்சியை புரிந்து கொள்ள முடிகின்றது.//

ஆம் நண்பரே, நான் உங்கள் கூற்றை ஏற்றுக் கொள்கிறேன். நான் சொல்ல வந்தது, டிசம்பர் 26ஆம் தேதியை நினைத்து பார்த்து இருப்பார்களா? இதே தேதியில் நடந்ததை யோசித்து பார்ப்பார்களா என்று தான் கேள்வி எழுப்பினேன். மற்றபடி ஒவ்வொரு தமிழனும் சுனாமியைப் பற்றி பேசினால் நிச்சயம் ஏதாவது ஒரு விஷயத்திற்காக வருத்தப்படுவான்..

Anonymous said...

வணக்கம் ராம் சுரேஷ்,
நீங்கள் சொல்வது போல் சுனாமி வந்த அந்த கருப்பு 26ஐ பலர் நினைவில் வைத்துக் கொள்ள வாய்ப்பில்லை. நம் வாழ்கையின் வேகம் அதை அனுமதிப்பதும் இல்லை.

என் நண்பர்கள் பலர் ஞாயிற்றுக்கிழமை தோறும் மெரினா கடற்கரையில் விளையாடுவது வழக்கம். அவர்கள் அன்று போகாதது எனக்கு வாய்த்த அதிருஷ்டமாகவே கருதுகிறேன்.

நானும் அப்போது ஆந்திராவில் ஒரு கிராமத்தில் ப்ராஜெக்ட் விஷயமாக இருந்தேன். உங்களைப் போல ஒவ்வொரு நிமிடமும் எண்டிடிவி பார்த்துக் கொண்டிருந்தேன். தெய்வத்தின் கருணை, எனக்கு தெரிந்தவர்கள் யாருக்கும் ஏதும் நேரவில்லை.

Related Posts with Thumbnails