சியாமளா-15: திவ்யாவுடன்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15

மறுநாள் காலையில் க்ளையண்ட் ஆஃபிஸ்க்கு வந்தனர். கணேஷிடம் ஒரு படபடப்பு தொடர்ந்து இருந்து கொண்டே இருந்தது. சியாமளா கண்டுபிடித்துவிட்டால், இப்போது இருப்பதைக் காட்டிலும் பெரிய பிரச்சினையில் சிக்கிக் கொள்வோம் என தெரிந்ததால், படபடப்பை வெளியே காட்டிக் கொள்ளவில்லை. ஆனால் வியர்வை அருவி மாதிரி பொழிந்து காட்டிக் கொடுத்தது. அடிக்கடி கர்ச்சீஃபால் எடுத்து துடைத்துக் கொண்டான். க்ளையண்டின் பெரியதலைகளுக்கு இன்ட்ரோ கொடுப்பதற்காக இருவரையும் க்ளையண்ட் சர்வீஸ் மேனேஜர் கிருஷ்ணன் ஒவ்வொரு இடத்திற்கும் கூப்பிட்டு போய்க் கொண்டிருந்தார். .

வழியில் எங்கும் திவ்யாவை சந்தித்துவிடக்கூடாது என 360 டிகிரியிலும் சுற்றுமுற்றும் பார்த்து அவள் இல்லை என உறுதிப்படுத்திக் கொண்டு போனான்.

“யாரைத் தேடிக்கிட்டு இருக்க?” மீட்டிங் முடிந்து திரும்பும்போது சியாமளா ஹஸ்கி வாய்ஸில் நடந்துகொண்டே கணேஷிடம் கேட்டாள்.

”இல்லை.. யாரையும் தேடலை?” அவசரம் அவசரமாக மறுத்தான்.

“இல்லை.. நீ யாரை தேடுறன்னு எனக்கு தெரியும்?”

“யாரை?”

“திவ்யா? அவளைத் தான தேடுற?”

வியர்வை மீண்டும் அருவியாய் கொட்ட ஆரம்பித்தது. “அய்யோ, இவளுக்கு எல்லாம் தெரிஞ்சி போச்சா?” சியாமளா, காலேஜ் மேட்டரைப் பத்தி ஆரம்பித்தால் காலில் விழுந்து உண்மையை மொத்தம் கொட்டிவிடலாம் என்ற முடிவுடன், டென்ஷனை ஒருவழியாய் சமாளித்துக் கொண்டு,

“ஆமா.. உனக்கு எப்படி தெரியும்?” அவன் கேட்பதற்கும், காஃபி எடுக்க பேன்ட்ரியினுள் நுழைவதற்கும் சரியாக இருந்தது.

“அன்னைக்கு காலங்கார்த்தாலேயே ஜொள்ளு விட்டத நானும் நோட் பண்ணேன். கெத்து மெயிண்டெயின் பண்றதுக்காகத் தான் அவகூட பேசாம விறைப்பா திரிஞ்சன்னும் எனக்கு தெரியும். எப்படி உன்னை மாதிரி பசங்களால மட்டும் இப்படி இருக்க முடியுது?” என நேருக்கு நேராக கணேஷிடம் சண்டை போடுவது போல் கேட்டாள்.

உள்ளே டென்ஷனில் இழுத்து இருந்த மூச்சை, வாய் வழியே ஊதி வெளியே விட்டு விட்டு “அடச்சே.. இதத்தான் கேட்க வந்தியா?“ என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, “இல்ல.. இல்ல.. இன்னிக்கு வர்றதா சொல்லிட்டு இருந்தாங்கல்ல, அதான் எங்கன்னு பார்த்தேன். மற்றபடி அவங்கள நான் சைட் எல்லாம் அடிக்கல?”

“ம்ம் சரி சரி.. ஒரு வாரம் கழிச்சி தான் வர்றதா சொன்னா.. இன்னொரு விஷயம் திவ்யா நம்ம ஏஜ் க்ரூப் தான். வாங்க போங்கன்னு சொல்ல வேணாம். அது திவ்யாவுக்கே பிடிக்காது?”

”என்கிட்டேயேவா?” என லைட்டாக சிரித்துவிட்டு புன்முறுவலுடன், “ஓ.கே. மேடம்” என்றான்.

“கொஞ்ச நேரத்துல நானே வாயைக் கொடுத்து மாட்டிக்க பார்த்தேனே? உஷார்டா கணேஷ்” என உள்ளுக்குள் அலாரம் செட் பண்ணிக் கொண்டான் கணேஷ்.

காஃபி எடுத்துக் கொண்டு இருவரும் அவரவர் இடத்துக்கு போய் கொஞ்சம் கொஞ்சமாக வேலையில் மூழ்க ஆரம்பித்து இருந்தார்கள்.

லஞ்ச் டைம் நெருங்க ஆரம்பித்தது. இருவரும் லஞ்ச் பாக்ஸ் எடுத்துக் கொண்டு Cafetaria போய் சாப்பிட ஆரம்பித்தனர். வெளியில் இருந்து பார்த்தால், கணேஷ் மட்டும் சாப்பிடுவது தெரியும்.

“கணேஷ், யார்கூடவும் ட்ரீட், பார்ட்டின்னு சொல்லி போயிடாதே. அதுவும் டேவிட், ஸ்மித் உடன்” சியாமளா ஆரம்பித்தாள்.

“”ஏன்? எல்லாரும் நல்லாத் தான் பேசுறாங்க?”

“அதுக்கு இல்ல.. எல்லாரும் ஒரு மாதிரி?”

“ஒரு மாதிரின்னா?”

“ஒரு மாதிரின்னா ஒரு மாதிரி” 30 செகண்ட் இடைவெளி விட்டு, “எல்லாரும் நல்லாத் தான் பேசுவாங்க.. ஆனா ஒரு மாதிரி டைப்.. அதாவது Gay டைப். உஷாரா இரு.. எக்குதப்பா போய் யார்கிட்டயும் மாட்டிக்காத..” மறுபடியும் 30 செகண்ட் இடைவெளி விட்டு, “ஒண்ணும் ப்ராப்ளம் இல்ல. அதான் நான் இருக்கேன்ல”

”வாட்?”

“ஐ மீன், நான் தான் கூட இருக்கேன்ல.. உன்னை எங்கேயும் தனியா அனுப்ப மாட்டேன்னு சொல்லவந்தேன்” மூச்சு வாங்கிக் கொண்டு அர்த்தத்தை சரியாக மொழிபெயர்த்து சொன்னாள்.

“ஓ… ஓ.கே”

திரும்பவும் கணேஷ் தொடர்ந்தான், “டூ மினிட்ஸ் வெயிட் பண்ணு. நான் ஹோட்டல்ல இருந்து சிப்ஸ் எடுத்திட்டு வந்தேன். போய் எடுத்திட்டு வர்றேன்?” என்று சொல்லிவிட்டு கெளம்பினான்.

இரண்டு நிமிடத்திற்கு முன்னதாகவே திரும்ப வந்துவிட்டான். பேண்ட்ரியினுள் இருந்து இரண்டு பெண்கள் சிரிக்கும் சத்தம் அதிர அதிர கேட்டது. நச் ஃபிகர் ஜெனிஃபராக இருக்குமோ என திடீரெனஃபார்ம் ஆன ஜொள்ளுடன், உள்ளே வந்தவனுக்கு பெரும் ஷாக்.

உள்ளே சியாமளாவுடன் திவ்யா பேசிக் கொண்டிருந்தாள். திவ்யா சாதாரணமாக வரவில்லை. வொயிட் அண்ட் வொயிட் டைட்டான சுரிதாரில், ROTFL என சிரித்துக் கொண்டிருந்தாள்.

“இந்த சுரிதார் எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே….” என யோசித்துக் கொண்டிருக்கும்போது, “ஓ.. மை காட்.. இது காலேஜ்ல நான் வாங்கிக் கொடுத்தது மாதிரி இருக்கே.. அளவு தெரியாம ரொம்ப லூஸா வாங்கிக் கொடுத்தத, இப்பவும் வச்சிருக்காள்லா?” என யோசித்துக் கொண்டே பேண்ட்ரி வாசலிலே நின்று கொண்டிருந்தான் கணேஷ்..

“ஹேய் கணேஷ்.. கெட் இன்..” என திவ்யா 1000 வாட்ஸ் பல்ப் போல் சிரித்துக் கொண்டே உள்ளே வரச் சொல்லி சைகை கொடுத்தாள். நேராக இடத்திற்கு வந்தான்.

” என்னடா, ஒரு வாரம் கழிச்சி வர்றேன்னு சொன்னவ.. இப்பவே வந்துட்டான்னு பாக்குறீயா கணேஷ்?”

“ம்ம்ம்..” என எதையோ மென்று கொண்டு, தலையை மேலும் கீழுமாக அசைத்துக் கேட்டான்.

“எல்லாம் கல்யாண மேட்டர் தான்?”

“வாட்??”

“நீ தான் வாயைவே திறக்க மாட்டேங்குற.. ஆனா சியாமளா ரொம்ப ஃபாஸ்ட்?”

“என்ன சொன்னா….ங்க?” என “ங்க” வை போலியாக சேர்த்துக் கொண்டு வறண்ட தொண்டையில் வார்த்தைகளை சேகரித்துக் கொண்டு கேட்டான்.

“அவங்க கல்யாண மேட்டர் பத்தி.. உனக்கு தெரியாதா கணேஷ்?” என கன்னாபின்னாவென துள்ளலுடன் கேட்டாள் திவ்யா.

பசி சுத்தமாக அடங்கி பயம் அடிவயிற்றுடன் மொத்த வயிறையும் கவ்விக் கொள்ள முகத்தில் கொஸ்டின் மார்க் வரைந்து திவ்யாவையும், சியாமளாவையும் மாறி மாறி பார்த்துக் கொண்டிருந்தான் கணேஷ், வெளிறிப் போன கண்களுடன்…..

***************************************

கண்ணாமூச்சி நேரங்கள்


சிறகுகள் தொலைந்த
பறவை பதறி இருப்பிடம்
தேடும்போது ஆடும்

இருப்பிடம் போல் இருக்கும்
ஒடுங்கிய கூடாரம்
பெருத்த குடிகாரன்
த‌வ‌ழ்ந்து த‌வ‌ழ்ந்து
தேடும் போது ஆடும்

கூடாரம் கூட தேடிக் காணாத‌
இடத்தில் எரிபொருள்
போக காத்திருக்கும்
வயது பெண்
அபலநிலையுடன்
கடிகாரம் த‌ட்டித்
தேடும் போது ஆடும்

என்னைப் போல்
காதலியைத் தொலைத்தவன்
வாழ்வைத் தொலைத்து
தேடும் போது ஆடும்

கண்ணாமூச்சி நேரங்கள்
என்றும் ஓய்வ‌தே இல்லை

********************************

சியாமளா-14: காத‌லியின் ச‌க‌வாச‌ம் ந‌ர‌க‌ம்

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14

காலடியில் பூமி நழுவுவது போல், கணேஷ்க்கு இருந்தது. லண்டனுக்கு வந்து சேர்ந்த முதல் நிமிடத்திலேயே இப்படிப்பட்ட அதிர்ச்சி இருக்குமென அவன் கனவில் கூட நினைத்து பார்க்கவில்லை. இருவரும் கணேஷை நோக்கி நடந்து வந்தனர். சிறுமூளை அவசர அவசரமாக அலாரம் அடித்ததில், ட்ராலியில் இருந்து ஏதோ கீழே விழுந்தது போல் பாவ்லா பண்ணினான்.

"என்னாச்சி கணேஷ்" சியாமளா கேட்டாள்.

"இல்ல.. பேக் கீழே விழுற மாதிரி இருந்துச்சி.. அதான் சரி பண்ணேன்"

"ஓ.கே. பை தி வே, ஸீ இஸ் திவ்யா" என இன்ட்ரோ கொடுத்தாள்.

திவ்யா உதட்டில் சிரிப்புடன் கை கொடுத்து விஷ் பண்ண, கைகளை நீட்டினாள். கணேஷ்க்கு உள்ளங்கையில் சூழ்நிலையின் சூடு பரவியது. அவனும் கைகளை நீட்டினான்.

"ஓ.. ஐ ஸீ. ஐ'யாம் கணேஷ்" என்று தெரியாத ஆள் போல் பதில் இன்ட்ரோ கொடுத்தான்.

அரை நிமிடம் கணேஷின் கண்களை உற்று நோக்கிய திவ்யா, "சம்திங் ராங்" என மனதுக்குள் நினைத்துக் கொண்டு, "ஓ.கே. லெட்ஸ் கோ" என கார் பார்க்கிங் ஏரியா நோக்கி நடக்கத் தொடங்கினார்கள். இந்த நான்கு வருடத்தில் எவ்வளவு நடந்து விட்டன? ஆஸ்திரேலியாவில் படித்தவள் லண்டனில் வேலை பார்க்கிறாள். லண்டன் குளிரின் மினுமினுப்பும் தோலின் நிறத்திலும், வாயிலிருந்து வரும் வார்த்தைகளில் வலுக்கட்டாயமாக சேர்ந்துவிட்ட வெள்ளைக்கார இங்க்லீஷ் ஆக்சென்ட் என முழுதாக மாறியிருந்தாள் திவ்யா.

ஏர்போர்ட் வெளியே, ஃப்ரீ வே பிடித்தவுடன் கார் 100 மைல் வேகத்தில் சீறிக் கொண்டிருந்தது. லண்டன் நகரம் இன்னும் விழிக்கவில்லை. கார் பின் சீட்டில் கணேஷும், சியாமளாவும் அமர்ந்திருந்தனர்.

திவ்யா கார் ஓட்டிக் கொண்டே பேச்சை ஆரம்பித்தாள், "என்ன சியாமளா, ரொம்ப டையர்டா இருக்கீங்களா? ஜெட் லாக் ஃபீல் பண்றீங்களா?"

"நோ நோ. ஃப்ளைட்லயே சரியான தூக்கம். ஃப்ரெஷ்ஷா தான் இருக்கோம். மே பி, ஈவ்னிங் தான் ஜெட் லாக் வரும்ன்னு நினைக்கிறேன்"

"ஓ.. ஓகே.. லாஸ்ட் டைம் வரும்போது கணேஷ் வரலீயே?"

"யெஸ். அவர் இப்ப தான் ஜாயின் பண்ணாரு"

"ஓ.. ஐ ஸீ.."

"ம்ம்.. இப்பவும் நாம WestMinster ஆஃபிஸ் தானே?"

"நோ.. நீங்க இப்ப போக போறது RichMond ஆஃபிஸ்"

"அப்ப அங்க நீங்க இருக்க மாட்டீங்களா?"

"யெஸ். இப்போதைக்கு அந்த ப்ளான் இல்ல. ஆனா என் பாஸ்கிட்ட நான் பேசிட்டு எப்படியும் ஒன் வீக்ல உங்க ப்ளேஸ்க்கு வந்திடுவேன். உங்கள பார்த்த உடனே, நீங்க இங்க இருக்க போற ஒன் மன்த்ல உங்க கூட கொஞ்சம் டைம் இருக்கணும்னு தோணுது" என கணேஷை ஓரக் கண்ணால் பார்த்தபடி சொன்னாள் திவ்யா.

"ஓ.. ஸோ நைஸ்" விபரீதம் புரியாமல் சந்தோஷத்தை வார்த்தைகளில் கொட்டினாள்.

கணேஷ் இதில் கலந்து கொள்ளவே இல்லை. அவர்கள் பேசியதையும் காது கொடுத்துக் கேட்கவில்லை. விடியக் காத்திருக்கும் லண்டன் நகரத்தின் வெளிச்சத்தை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தான். ஒன்றரை நேர பயணத்தின் முடிவில் ரிச்மண்டில் உள்ள RiverSide ஹோட்டல் வந்து சேர்ந்தனர். Suite 109,110 புக் செய்யப்பட்டு இருந்தது. விடிந்து விட்டது.

கெளம்புவதற்கு முன் திவ்யா "ஓகே.. நல்லா ரெஸ்ட் எடுங்க.. நாளைக்கு காலைல நானே வந்து பிக்கப் பண்ணிக்குறேன். முடியலேன்னா, கார் அனுப்புறேன்"

"ஓ.கே. தேங்க்ஸ்" என்றாள் சியாமளா, அவளுடன் கைகுலுக்கிக் கொண்டே

"என்ன கணேஷ், நீங்க எதுவும் பேசவே மாட்டேங்குறீங்க‌?" குறும்பு புன்னகையுடன் கேட்டாள் திவ்யா.

"நோ.. நத்திங்.. தேங்க்ஸ் ஃபார் யுவர் ஹெல்ப்" என சம்பிரதாயமாக சொல்லி கை கொடுத்தான்."Something wrong again. ஒரு வாரம் வேணாம். ரெண்டே நாள்ல இங்க வந்திடணும். கணேஷ்க்கிட்ட நாலுவருஷ கதைய பேசணும்" என மனதிற்குள் நினைத்துக் கொண்டு கெளம்பினாள்.

கீ வாங்கிக் கொண்டனர்.

"என்னப்பா, ஆர் யூ ஆல்ரைட்?" என தோள்பிடித்து கேட்டாள் சியாமளா.

"யா.. ஓ.கே. நோ ப்ராப்ளம். லைட்டா டையர்டா இருக்கு?"

"ஓ.கே. நீ போய் ரெஸ்ட் எடு. நான் ப்ரேக்ஃபாஸ்ட் ரெடி பண்ணிட்டு உன்ன கூப்பிடுறேன்"

"ஓ.கே" என ரூமுக்குள் சென்று கொண்டு பூட்டிக் கொண்டான்.

'தொப்'பென மெத்தையில் சரிந்து விழுந்தவனின் தலை சுக்குநூறாக வெடிக்கக் காத்திருந்தது. "திவ்யாவை எப்படி சமாளிப்பது?, அவள் மனதில் இன்னும் கல்லூரி நினைவுகள் ஓடிக் கொன்டிருக்கிறதா?, இருந்தால் அவளை எப்படி சமாளிப்பது?, சியாமளாவிடம் சொல்லிவிடலாமா?, சொல்லாமல் இருந்தால் கண்டுபிடித்துவிடுவாளா?, திவ்யா சியாம‌ளாவிட‌ம் உடைத்து விடுவாளா?, அத‌ற்கு சியாம‌ளா எப்ப‌டி ரியாக்ட் ப‌ண்ணுவாள்?, சியாமளா சொன்னது போல் கொன்று விடுவாளோ? க‌ல்யாண‌ம் ந‌ட‌க்குமா?" என‌ ஒரே செக‌ண்டில் ஓராயிர‌ம் குழ‌ப்ப‌ங்க‌ள் க‌ண் முன்னே ஓடிக் கொண்டிருந்த‌து.

"க‌ல்யாணம் ஆன‌ காத‌லியின் ச‌க‌வாச‌ம் ந‌ர‌க‌ம்" சுஜாதா எப்ப‌வோ சொன்ன‌து க‌ணேஷ் விஷ‌ய‌த்தில், வேறு மாதிரி வொர்க் அவுட் ஆக‌ ஆர‌ம்பித்த‌து. "கல்யாணப் பெண் பக்கத்தில் இருக்க காத‌லியின் ச‌க‌வாச‌ம் ந‌ர‌க‌ம்"

****************************

காத‌ல் எனும் ம‌ன்ம‌த‌ன்!

'இவ‌ள் தான் வாழ்க்கை'
என‌ க‌ர‌ம் ப‌ற்றி ஆர‌ம்பிக்கும்
காத‌ல் எனும் மன்ம‌த‌னின்
இனிய வாழ்க்கை
'இவ‌ள் என் வாழ்க்கை'
என‌ நியாப‌க‌ப்ப‌டுத்தும்
சில நேர‌ங்க‌ளில்
அலார‌ம் வைத்து எழுப்பிக்
கொள்ள கொல்ல‌
அழ‌கிய ஓர் நாளில்
'இவ‌ளா என் வாழ்க்கை'
என‌ ப‌ல்லிளித்து
என்ன‌வளில்
என்னைப் பிரித்து
அவளுடன்
வெளிவாசல் விரைகிறான்
காத‌ல் எனும் அர‌க்க‌ன்!


அவள் வ‌ரும் முன்பு
அடுக்கி வைக்க‌ப்ப‌ட்டு சீராக‌
அழ‌காக‌ இருந்த‌ அல‌மாரிக‌ள்
வ‌ந்து சென்ற‌ பின்பு
அங்கொன்றும் இங்கொன்றுமாக‌
சாய்ந்து நிமிர்ந்து
சரிந்து கிட‌க்கும் ம‌து கோப்பைக‌ளுட‌ன்
முன்பும் பின்பும்
அதே ஆள்
அழகிய முள்தாடிக‌ள் மட்டும்
அந்நிய‌ன்

செத்தவன் மீண்டும்
மண்ணில் எழுவதைப் போல்
பன்மடங்கு அபூர்வம்
ஒதுக்கிய காதலி
கரம் மீண்டும் பற்றி
கண்ணீரால் நனைக்கும்
காதல் வாழ்க்கை

*************************

ஆயிரத்தில் ஒருவன் ட்ரைலர் விமர்சனம்!




அட்டகாசம்..

முதலில் ரீமா, ஆன்ட்ரியா பேசும் பீட்டரில் வரிசையாக வரிசையாக டிங் டிங் என கேட்கிறது. இருந்தாலும் என்ன பேசுகிறார்கள் என புரிய முடிகிறது. Fs & Bs :)

படம் ஃபுல்லா இப்படி தான் பீட்டராக இருக்குமோ? அதில் எத்தனை இடத்தில் சென்சார் கத்திரியோ?

பருத்திவீரனைத் தொடர்ந்து இந்த படத்திலும், கார்த்தி சட்டை இல்லாமல் டவுசருடன் இறங்கியுள்ளார். "மம்மி" படத்தில் ஜெயிலில் இருந்து ஹீரோவைக் கூப்பிட்டுக் கொண்டு செல்வது போல், இந்த படத்தில் கார்த்தி??

ரெண்டு பேரிடமும் ப்ரோப்பஸ் பண்ணும் கார்த்தி, ரெண்டு பேருக்கும் நடுவில் படுத்திருக்கும் கார்த்தி, அவர் மேல் கால் தூக்கிப் போடும் ரீமாசென் வழக்கமான‌ செல்வராகவன் 'டச்' தெரிகிறது. படத்தில் நெறைய இடங்களில் அந்த டச் இருக்குமோ? டூ சென்சார் ஆஃபிஸர்ஸ்: அதில் எல்லாம் கத்திரி வேணாம் ப்ளீஸ் :)

படத்தின் சர்டிபிகேட் 'யூ'. எதுவுமே இருக்காதோ? :(

நிழலில் தெரியும் நடராஜர் நாட்டியமாடுகிறார். ஒருவேளை அது தான் படத்தின் ஹிண்ட்???

கடைசியில் சுட்டெரிக்கும் விழிகளுடன் வரும் சிவபெருமானில் தெரிவது பார்த்திபன் தானே?

அபோகாலிப்டோ, பைரேட்ஸ் ஆஃப் கரீபியன், 300 என ஹாலிவுட் பட லுக் :)

ஆர்வத்தை தூண்டி விடுகிறார்கள். பொங்கலுக்கு கண்டிப்பா ரிலீஸ் தான? சீக்கிரம் படத்தை ரிலீஸ் பண்ணுங்கப்பா...

************************

முத்தமிடத் தெரியுமா?

அழுக்கு ச‌கோத‌ரி
*********************

போக்குவ‌ர‌த்து நெரிச‌லில்
எதிர் வாகன பெண்ணின்
ம‌டியில் சிரிக்கும்
குட்டிக‌வுன் அழகியின்
பொக்கைவாய்க்கு
ஓரக்க‌ண் சிமிட்ட‌ல்களும்
பறக்கும் முத்தமும்
ப‌ழிப்பு சிரிப்பும்
ப‌ரிச‌ளிக்கும்போது
க‌ண்ணாடியைத் த‌ட்டி த‌ட்டி
க‌வ‌ன‌ம் கலைக்கிறாள்
அவ‌ளின் ஒன்றுவிட்ட‌
அழுக்கு ச‌கோத‌ரி

மாம‌னாரின் ம‌க‌ள்
*********************

நான் எப்போதும்
தூதுவிடும் சுரிதார் பெண்
ஒவ்வொரு முறையும்
க‌ண்டுகொள்ளாம‌ல் புற‌ம்
ஒதுக்கிவிடும் பொழுதெல்லாம்
யோசிக்க‌ வைக்கிறாள்
ஊரில் இருக்கும்
மாம‌ன் ம‌க‌னை
ம‌ன‌தில் வைத்திருக்கிறாளோ?
வேறு வ‌ழியில்லாமல்
எதிர்ப்படும்
ஒவ்வொரு பெண்ணின்
முகத்திலும் தேடுகின்றேன்
முக‌ம‌றியா
மாம‌னாரின் ம‌க‌ளை


முத்தமிடத் தெரியுமா?
************************

வெட்கப்பட‌த் தெரியுமா
என் கேள்விக்கு
வெட்கத்தில் சிவந்து கொண்டே
வெட்கத்தைப் பதிலாக‌
தரும் உன்னிடம்
ஈர‌ உத‌டுகளை
ஈரப்ப‌டுத்திக் கொண்டு
கேட்கத் துடிக்கிறேன்
முத்தமிடத் தெரியுமா?
*********************************

சியாமளா-13: அதிகாலையில் லண்டன் ஏர்போர்ட்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

இரண்டு பேரும் திரும்ப சென்னை வந்துவிட்டனர். நாளை மறுநாள் ஞாயிற்றுக்கிழமை இரவு விமான பயணம். கணேஷும் சியாமளாவும் அநியாயத்திற்கு ஷாப்பிங் பண்ணினார்கள். ஒரு மாதம் தங்க போவதற்கு, கல்யாணத்திற்கு ஷாப்பிங் பண்ணுவது போல் எக்கசக்கமாக வாங்கி குவித்தார்கள். 10 ரெடிமேட் ஷோரூம்ஸ், வுட்லேண்ட், அம்பிகா அப்பளம், டி,நகர் நல்லி சில்க்ஸில் பட்டுபுடவை என கடை கடையாய் ஏறி இறங்கி பர்ச்சேஸ் பெரிய அளவில் நீண்டது. "ஆன்சைட் போறதுக்கு எதுக்கு பட்டுப்புடவை?" எனவும் கணேஷ் சண்டை போட்டதில், சியாமளாவே ஜெயித்தாள். அதில் அவர்கள் போகாத ஒரே இடம், ஜூவல்லரி ஷாப்.
அங்கேயும் கணேஷ் மட்டும் தனியாக போய் சியாமளாவுக்காக ஒரு ரிங் வாங்கியிருந்தான், ஆன்சைட்டில் தனியாக இருக்கும்போது கொடுப்பதற்காக.

ஞாயிற்றுக்கிழமை காலையில் ஊரில் இருந்து இருவரும் பெற்றோரும் வந்துவிட்டனர். கணேஷ் வீட்டில்

"எனக்கு என்னமோ உங்க ரெண்டு பேரையும் ஒண்ணா அனுப்புறது சரியாப் படலை?" அம்மா ஆரம்பித்தார்.

"ஏன்மா? கடைசி நேரத்துல குட்டைய குழப்புறீங்க?"

"ரெண்டு பேரும் தனிதனியா போனாக் கூட இந்த அளவுக்கு வருத்தப்பட மாட்டேன்? ஆனா இது தான் என்னைய ஏதேதோ யோசிக்க வைக்குது?"

"அதான் ஏன்? நீங்க நினைக்குற மாதிரி இல்லமா.. இந்த பொண்ணு நல்ல பொண்ணு. பொண்ணு பாக்க போற அன்னைக்கு சொன்னத, நான் வாபஸ் வாங்கிக்குறேன்"

"உனக்கு வேணும்னா நான் வேற பொண்ண பார்த்து கட்டி வைக்குறோம். இந்த பொண்ணு வேணாம்?"

"இது என்ன புதுகதை? ஃபர்ஸ்ட் நான் வேணாம்ன்னு சொன்னேன், நீங்க வேணும்ன்னு சொன்னீங்க. இப்ப நீங்களே வேணாம்ன்னு சொல்றீங்க?. இதெல்லாம் ஓவர். எங்களுக்கு உள்ள நல்ல அண்டர்ஸ்டேண்டிங் இருக்கு. ஒண்ணா கோவிலுக்கு போனோம், அந்த பொண்ணு கூட தான் நான் ஒண்ணா ஊருக்கு வந்தேன். அம்மா.. சியாமளா ரொம்ப நல்ல பொண்ணும்மா. ஏதாவது சொல்லி கலைச்சி விட்றாதீங்க, ப்ளீஸ்ஸ்ஸ்?"

"அந்த பொண்ணு நல்ல பொண்ணு தான். அதுல எனக்கு சந்தேகமே இல்ல? ஆனா...."

"அப்புறம்? அம்மா, திஸ் இஸ் டூ மச். உங்க‌ பையனையே சந்தேகப்படுறது நல்லா இல்ல‌. போன வாட்டி மாதிரி நான் தம், தண்ணி எல்லாம் அடிக்க மாட்டேன். இது உங்க மேல சத்தியம்?"

"டேய், நீ என்ன லூஸா? நான் என்ன சொல்ல வர்றேன்னு உனக்கு புரியவே இல்லையா? ஏங்க நீங்களாவது சொல்லுங்க"

கணேஷ் அப்பா "ஹா ஹா.. விடு நீ நெனைக்குற மாதிரி எல்லாம் ஒண்ணும் ஆகாது. என்ஜாய் பண்ணட்டும். ஒரு மாசம் தான.. வந்தவுடனே கல்யாணத்த முடிச்சிடுவோம்"

கணேஷ், அவர்கள் இருவரையும் மனதிற்குள் திட்டிக் கொண்டு, வெளியே போய்விட்டான்.

இரவு 10 மணி. அண்ணா பன்னாட்டு விமான நிலையம். இரண்டு பேருடைய பெற்றோரும் வந்திருந்தனர். சியாமளாவின் அம்மா, கணேஷ தனியாக அழைத்து ஏகத்திற்கும் அட்வைஸ் மழை பொழிந்தார்.கணேஷ் அப்போது தான் கவனித்தான், "காலையில் அம்மாவின் கண்களில் கண்ட அதே குழப்பம், சியாமளாவின் அம்மா கண்களில் கண்கூடாக தெரிந்தது"

ஒருவழியாக ட்ராலியைத் தள்ளிக் கொண்டு, போர்டிங் பாஸ் வாங்க உள்ளே சென்றுவிட்டனர். எமிக்ரேஷன் க்ளீயரன்ஸ், செக் இன் எல்லாம் முடிந்து, ஃப்ளைட்டுக்காக காத்திருக்க உட்காரும்போது தான், இருவர் முகத்தில் 2000 வாட்ஸ் பல்ப் பிரகாசம்.

"என்ன சொன்னாங்க உங்க வீட்ல? அங்கேயும் லா லா லான்னு விக்ரமன் படம் ஓடுச்சா?" கணேஷ் ஆரம்பித்தான்.

"ஆமா.. தாங்க முடியல.. நானும் இதுவரைக்கும் ரெண்டு மூணு தடவ போயிருக்கேன். அப்பல்லாம் இப்பிடி ஃபீல் பண்ணதில்ல. இப்ப மட்டும் ஏன்னு தெரியல. ஒருவேள இப்ப நான் கல்யாண பொண்ணுல்ல. அதான் ஓவர் அக்கறைன்னு நினைக்கிறேன்" கண்ணடித்தாள்

"ம்ம்ம். உன்கிட்ட ரொம்ப நாளா கேட்கணும்னு நெனச்சிக்கிட்டு இருந்தேன். நீ ஏன் அடிக்கடி கண்ணடிக்கிற?"

"அதெல்லாம் ச்சும்மா" என சொல்லிக் கொண்டே மறுபடியும் கண்ணடித்தாள்.

"ஓ..நான் கூட உன் கண்ணுல தான் ஏதோ ப்ராப்ளம்ன்னு நெனச்சேன்?"

"நோ நோ.. யார்கிட்ட பேசும்போதும் இப்படி எல்லாம் பண்றதில்ல. இது கணேஷ் ஸ்பெஷல்" மறுபடியும் கண்ணடித்தாள்.

டைம் ஆகவே,ஜெட் ஏர்வேய்ஸ் அறிவிப்பு வந்தது. இருவரும் லேப்டாப் பேக்கை மட்டும் தூக்கிக் கொண்டு ஃப்ளைட் உள்ளே சென்றனர்.

கணேஷ் கார்னர் சீட்டில் உட்கார்ந்து கொள்ள, சியாமளா பக்கத்து சீட்டில் உட்கார்ந்தாள். ஃப்ளைட் பறக்க ஆரம்பித்தது. ரன்வேயில் இருந்து எகிறிக் குதித்து பறக்க ஆரம்பிக்கும் போது, டாப் ஆங்கிளில் கத்திப்பாரா பாலம், லைட்டில் மின்னும் மௌண்ட் ரோட், மெரீனா பீச் தாண்டி 45 டிகிரி டில்ட் ஆகி பறக்கும் வரை வெளியே பார்த்துக் கொண்டிருந்தவன், சியாமளா பக்கம் திரும்பி பேச ஆரம்பித்தான்.

"எவ்வளவு நேரம் ஜர்னி டைம்?"

"9 ஹவர்ஸ் ஆகும். ஏற்கெனவே போன இடம் தான். போர். திரும்ப போகுறதுக்கே இன்ட்ரஸ்ட் இல்ல. ஆனா கூட நீ வர்றல்ல. ஸோ, சம்திங் இன்ட்ரெஸ்டிங்"

"ஓ.. அப்படியா.. இப்ப ஏன் கண்ணடிக்கல?"

"நீ தான் கலாய்க்கிறீயே. ஸோ, இனிமே கெடையாது"

"நோ நோ கலாய்க்கல.. டவுட் க்ளீயர் பண்ணிக்கிட்டேன். ஆக்சுவலி, நீ அப்படி பண்றது ரொம்ப ரொமான்டிக்கா இருக்கு"

"அங்க தான் இருக்கு உல்லன் டவல். எடுத்து தொடைச்சுக்கோ. ஜொள்ளு ரொம்ப வழியுது"

அசடு வழிந்தான் கணேஷ்.

ஏர்ஹோஸ்டஸ் ஃபுட் ட்ராலியை தள்ளிக் கொண்டு வந்து கொடுக்க ஆரம்பித்தாள். கணேஷ் சியாமளா இடத்தை நெருங்கி, "ட்ரிங்க்ஸ் வேண்டுமா?" எனக் கேட்டாள்.

"Yes.. Budweiser பீர் ஒன்" என வழக்கமாக குடிப்பதை சொல்லிவிட்டு பின் சியாமளா அருகில் இருப்பது உறைத்து நாக்கைக் கடித்தான். உஷ்ணமாக முறைத்தாள், பின்

"டூ" என சொன்னாள் சியாமளா.

"அடிப்பாவி நீயும் அடிப்பியா?"

மறுபடியும் முறைத்தாள், "நீயே குடி" என கடுப்புடன் கணேஷிடம் கொடுத்தாள்.

"வெரி குட்" என வாங்கிக் கொண்டு வெட்கமே இல்லாமல் ரெண்டு மினி பீரையும் குடித்தான். சாப்பிட்டு முடித்துவிட்டனர். ஆஃப் சிக்நேச்சரையே தலைகீழாக கவிழ்ப்பவனுக்கு, இது எறும்பு கடிக்கும் அளவுக்கு கூட போதை ஏறவில்லை.

"ஏர்போர்ட்ல ரிசீவ் பண்றதுக்கு யாரும் வருவாங்களா?" தெளிவாகவே கேட்டான்.

"ம்ம், வருவாங்க. ரெகுலரா லாஜிஸ்டிக் டீம்ல இருந்து வருவாங்க. பட், இன்னைக்கு அங்க இருக்கிற ஒரு லேடி வர்றதா சொன்னாங்க" ரொம்ப கேஷுவலாகவே சொன்னாள். துளி கோபம் கூட இல்லை.

இப்படியே 1 மணிநேரத்திற்கும் மேலாக பேசிக் கொண்டிருந்தனர். பின்னர் தூங்கிவிட்டனர். லண்டன் நகரமே இன்னும் விடியவில்லை. அதிகாலை 4.30 மணி. ஃப்ளைட் லேண்ட் ஆனது. இருவருக்கும் தூக்க கலக்கம் துளியும் இல்லை. ஆனால் குளிர் பின்னிக் கொண்டிருந்தது. லக்கேஜ் கலெக்ட் பண்ணிக் கொண்டு, வெளியே வரும்போது ஏகப்பட்ட பேர் கையில் போர்டுடன் காத்துக் கொண்டிருந்தனர். கணேஷ், தங்களின் பெயரை தேடிக் கொண்டிருந்தான். யாரிடமும் இல்லை.

சியாமளாவிடம் கேட்டான். "அவங்களுக்கு என்ன நல்லா தெரியும். அதனால வச்சிருக்க மாட்டாங்க. வெயிட் தேடிப் பார்க்கலாம்" என்றாள். அங்கே இருந்த எல்லா வெள்ளைக்காரிகளின் முகத்தையும் ஆவலோடு பார்த்துக் கொண்டிருந்தான்.

நீளமான குளிர் ஜாக்கெட், கையில் க்ளோவ்ஸ் அணிந்து கொண்ட போனி டெயில் லேடியை தொட்டு திருப்பினாள் சியாமளா. திரும்பினாள்.

"ஹாய்" என சொல்லிக் கொண்டே இருவரும் கட்டிப் பிடித்துக் கொண்டனர்.

"இது தான் கணேஷ்!" என கணேஷ்க்கு இன்ட்ரோ கொடுக்க சியாமளா திரும்பினாள். அவன் இல்லை. 50 மீட்டர் தொலைவிலேயே பேய‌றைந்தது போல் அதிர்ச்சியில் உறைந்திருந்தான் கணேஷ்.

அந்த போனிடெயில் லேடி ஆவலுடன், "யார்?" என எட்டிப் பார்த்தாள். ஆச்சர்யத்தில் திவ்யாவின் கண்கள் விரிந்தன.

******************************

வேட்டைக்கார‌ன்!

வில்லு படம் ரிலீஸ் ஆகி பத்து மாதங்கள் கழித்து வந்த படம். நடுவே ராகுல் காந்தியுடன் அசிங்கப்பட்ட அவமானப்பட்ட சந்திப்பு(அரசியல் ஆசை யாரை விட்டது?), அதற்கு மேல் தமிழக அரசிடம் கிடைத்து வந்த ஸாஃப்ட் கார்னர், ஒன் ஃபைன் டே நிறுத்தப்பட்டு காமன் மேனாகி எதிர்கொண்ட நில பிரச்சினை, சுய விருப்பமில்லாமலே ஏ.வி.எம்மினால் சன் டிவிக்கு கை மாறப்பட்ட வேட்டைக்காரன் படம், அதன் தொடர்ச்சியாக சன் பிக்சர்ஸ் ஏற்படுத்திய அவமானங்கள்(ரீ ஷூட், ப்ரிவீயூ ஷோ தகராறு) என ஏகப்பட்ட பிரச்சினைகள் நடிகர் விஜய்க்கு இந்த வருடத்தில். இது எல்லாவற்றிறுகும் மேல் அழகிய தமிழ்மகன், குருவி, வில்லு என வரிசையாக மூன்று தோல்வி படங்களுக்கு பின், கட்டாயமாக ஒரு வெற்றிப் படம் கொடுக்கப்பட வேண்டும் என்ற நிர்பந்தம். இப்படியான‌ ஏகப்பட்ட ஸ்ட்ரெஸ் நடுவினில் முழுவீச்சினில் தயாரான படம், நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

எப்போது விஜ‌ய் ப‌ட‌ம் ரிலீஸ் ஆனாலும், என‌க்குள் அள‌வில்லாத‌ ஆர்வ‌ம் ஏற்ப‌டும். பெரும்பாலும் முத‌ல் நாளிலேயே பார்த்துவிடுவேன். இந்த‌ முறை இர‌ண்டாவ‌து நாளில் பார்த்தேன். என்னை மிக‌வும் ஆர்வ‌ப்ப‌டுத்திய‌ விஷ‌ய‌ம், விஜ‌ய்யின் ம‌க‌ன் டான்ஸ் ஆடிய‌து. க‌ண்டிப்பாக‌ ர‌சிக‌ சிகாம‌ணிக‌ள் அவ‌ருக்கும் ஃப்ளெக்ஸ் பேன‌ர், மாலை போட்ட க‌ட் அவுட் என‌ பிர‌மாத‌ப்ப‌டுத்தியிருப்பார்க‌ள் என‌ நினைத்திருந்தேன், கூட‌வே ஓர் அடைமொழியும் எதிர்பார்த்திருந்தேன். யெஸ், நான் நினைத்த‌து ச‌ரி தான். "ஜூனிய‌ர் த‌ள‌ப‌தி" என‌ பொருத்த‌மான‌ டைட்டிலுட‌ன் சிரித்துக் கொண்டிருந்தார் ஜூனிய‌ர் த‌ள‌ப‌தி விஜ‌ய். "ஜுனிய‌ர் த‌ள‌ப‌தி" டைட்டில் ரிச‌ர்வ்டு. ஆந்திராவின் "ஜூனியர்" டைட்டில் கல்ச்சர், தமிழ்நாட்டில "ஜூனியர் சிவாஜி" என மொக்கையான ஒருவரால் பயன்படுத்தப்பட்டு மொக்கையானாலும், இன்னும் 15 ஆண்டுக‌ளில் மீண்டும் விஸ்வ‌ரூப‌ம் எடுக்க‌லாம். எடுக்கும்.

பேக் டூ வேட்டைக்கார‌ன். விஜய். முதலில் பூ போட்ட வைலட், சிவப்பு, டார்க் பச்சை என ஜிங்குச்சா கலரில் சட்டை, சுரிதாரின் டாப்ஸ், பட்டுச்சேலையின் முந்தானை, ராமராஜன் கலர் பேண்ட் வகைகளையும் முதலில் கவனமாக தவிர்க்க வேண்டும். இல்லையென்றால் ராமராஜன் ஃபீல்ட் அவுட் ஆகி 20 வருடங்கள் ஆகியும் இன்னும் சொல்வதைப் போல், மோசமான உதாரணம் ஆகிவிடுவீர்கள். அஜீத்தை ஃபாலோ பண்ணி இவரும் ஆரம்பித்துவிட்டார். நிறைய இடங்களில் இளம்தொப்பை வெளியே தெரிய ஆரம்பித்து இருக்கிறது. அதே போல் காமெடி டிராக். காமெடியும், கதைக்களத்தின் வேகத்திற்கு ஏற்ப அதுவாக அமைய வேண்டும்(உ.தா: கில்லி), கட்டாய திணிப்பாக இருக்கக்கூடாது. சச்சினில், "அண்ணே நீங்க பேர்டா'ண்ணே" என நகத்தைக் கடித்துக் கொண்டே கேட்பார். அதுவே செயற்கையாக இருந்தாலும் ரசிக்கும்படி இருக்கும். இதில் செயற்கை + ரசிக்கமுடியவில்லை. போக்கிரியில் அலட்டலாக பிரகாஷ்ராஜை டீல் பண்ணுவது நன்றாக இருக்கும். இந்த படத்திலும் மதுரை ரவுடியை டீல் செய்யும் இடத்தில் அந்த ஸ்டைலை உபயோகிக்குறார். சமீபகாலமாக விஜய்யின் படங்களில் ஒரு மோசமான விஷயம் தொடரப்படுகிறது. ஒரு மாடியிலோ அல்லது ஏதாவது உயரமான இடத்திலோ சண்டை நடந்தால், கொஞ்சம் கூட யோசிக்காமல் அங்கே இருந்து விஜய் குதித்து விடுகிறார், ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல். அந்த ஒரு விஷயமே, குருவி படம் எல்லாரையும் தியேட்டரை விட்டு பறக்க வைத்தது. இந்த படத்திலும் 'பறக்கும் விஷயம்' இருந்தாலும், குருவி அளவு 2 கி.மீ தூரம் இல்லை.

அனுஷ்கா. சாதார‌ண‌மாக‌ அவ‌ரைப் பார்த்தாலே, ஒரு வைப்ரேஷ‌ன் உட‌ம்பெல்லாம் ப‌ர‌வும். இப்ப‌டி இருக்க, அவரை ஏதாவது ஒரு வைப்ரேஷ‌னில்(சின்ன தாமரை பாடல் பார்க்கவும்) பார்த்தால் சாதாரணமாக வரும் வைப்ரேஷனுடன் எக்ஸ்ட்ரா வைப்ரேஷன் சேர்ந்து ஜூர‌ம் வ‌ருகிற‌து. ப‌னை ம‌ர‌ உய‌ர‌த்தில், த‌ம்மாத்துண்டு ட்ரெஸ்ஸுட‌ன் அவ‌ர் ஆடுவ‌தைப் பார்க்கும்போது குளிர் ஜூர‌ம் ஹாட்டாக‌ அடிக்கிற‌து. படத்தில் வேஸ்ட் பண்ணிவிட்டார்கள். அழ‌கான‌ பொய‌ட்டிக்கான 7/g மாதிரியான ஒரு ல‌வ் ச‌ப்ஜெக்ட் ப‌ட‌த்தில் அவ‌ர் ந‌டிக்க‌ வேண்டும். அப்படி மட்டும் அவர் நடித்தால், அத்துட‌ன் "த‌மிழ்நாடு அனுஷ்கா ந‌டிக‌ர் ம‌ன்ற"த்தில் முழுநேர‌ செய‌லாளர் ஆகிவிடுவேன்.

க‌தை. விஜ‌ய் ப‌ட‌த்தில் இதெல்லாமா முக்கிய‌ம்?

பாட‌ல்க‌ள். அனுஷ்கா வ‌ரும் எல்லா பாட‌ல்க‌ளும் அட்ட‌காச‌ம். முத‌ல் பாதியில் வ‌ரும், 'க‌ரிகால‌ன் காலைப் போல்' அருமையான‌ ப்ளேஸ்மெண்ட். இர‌ண்டாம் பாதியில் வ‌ரும், 'சின்ன‌ தாம‌ரை', 'என் உச்சி ம‌ண்டைல‌' எதிர்பாராத‌ இட‌த்தில் திணிக்க‌ப்ப‌ட்டுள்ள‌து. அத‌ற்கான‌ லீட் காட்சிக‌ளும், அலுப்பு, சலிப்பு. பெண் வேஷம்(உவ்வே?), க‌ல‌ரிங் ஹேர் ‍என்ன‌ கொடுமை விஜ‌ய் இதெல்லாம்?

ப‌ஞ்ச் லைன்ஸ். ச‌ன் டிவி ட்ரைல‌ரில் எல்லாத்தையும் போட்டுவிட்டார்கள். இதில் ஒரு கொடுமை, ட்ரைல‌ரில் பிட்டு பிட்டாக‌ வ‌ரும் நாலைந்து ப‌ஞ்ச் டையலாக் வ‌ச‌ன‌ங்க‌ள், ஒரே ஒரு காட்சியில் கோர்வையாக வருபவை.

வில்லன். சாய்குமார், ஜூவல்லரி ஷாப்பில் ஒரு பெண்ணை அப்ரோச் பண்ணும் இடத்திலேயே முழுக்கதையையும் யூகித்துவிட்டேன். ஆனால் நான் யோசித்தது, அனுஷ்காவை. ஆனால் அவர் கேட்பது, இதற்காகவே திணிக்கப்பட்ட ஒரு கண்ணாடி பெண். இடைவெளிக்கு பிறகு, அவர் எங்கே போனார் என தெரியவில்லை. அதுசரி, இதையெல்லாம் விஜய் படத்தில் தேடிக் கொண்டிருக்க முடியுமா? அடியாளாக வரும் ஒருவன், தாடியை எல்லாம் கலரிங் பண்ணி இருக்கிறான். அது யார் மெயின் வில்லன் வேதநாயகம்? செம காமெடி பீஸ். அடகுக்கடை வாசலில் உட்கார்ந்திருக்கும் சேட் மாதிரி வருகிறார் போகிறார். சத்யனைக் கொல்லும் இடத்தில் மட்டும் நிமிர்ந்து உட்கார வைக்கிறார். மற்றபடி க்ளைமேக்ஸில் மினிஸ்டர் ஆவதற்கு அவர் எடுக்கும் மூவ் எல்லாம், தேவையில்லாத ஜவ்வு.

Verdict: குருவி, வில்லு அள‌வுக்கு மோச‌ம் இல்லை. அதே ச‌ம‌ய‌ம் கில்லி, போக்கிரி அள‌வில் பாதி கூட‌ இல்லை.

நான் விஜ‌யிட‌ம் மிக‌வும் விரும்பிய‌ விஷ‌ய்ம், க‌தை செல‌க்ச‌ன். அதை நான் உண‌ர்வுப்பூர்வ‌மாக யோசித்தது திரும‌லை, கில்லி, ம‌துர‌, திருப்பாச்சி என‌ ஒரு தொடர்ச்சியாக ஹிட் ப‌ட‌ங்க‌ள் கொடுத்த‌ போது. விக்ர‌ம், சூர்யா போல‌ ந‌டிப்பில் ப‌ல‌ ப‌ரிமாண‌ங்க‌ள் த‌ன்னால் காட்ட‌ முடியாது என‌ தெரிந்தும் தொட‌ர்ந்து வெற்றிப் ப‌ட‌ங்க‌ளைக் கொடுப்ப‌து சாதார‌ண‌ காரிய‌மில்லை. அதற்கு காரணம் க‌தை செல்க்ச‌ன் என‌ நினைத்திருந்தேன். இந்த‌ 'நினைத்திருந்தேன்'னில் என் எண்ண‌ம் த‌வ‌று என‌ நீங்க‌ள் நினைக்கலாம். இதை மாற்ற‌ வேண்டிய‌ பொறுப்பு, விஜ‌ய்யிடம் ம‌ட்டும் தான் உள்ள‌து. அது தான் என்னை போன்ற‌ ர‌சிக‌ர்க‌ள் அவ‌ரிட‌ம் எதிர்பார்ப்ப‌து.

***********************************************

தண்ணீரைக் காதலிக்கும்...

வாழத் தான்
வேண்டியிருக்கிறது

எந்நேரமும் போதையில்
தண்ணீரில்
தூக்கமிழந்து துடுப்புகளை
சிறு உணவுதுண்டுக்காக‌
இந்த பொல்லாத வாழ்க்கையில்
அசைத்து அப்படியும்
வாழத் தான்
வேண்டியிருக்கிறது

எதிரிகளின் நயவஞ்சக‌
தூண்டிலில் சிக்காமல்
எப்படித் தான் வாழ்ந்தாலும்
ஒரு நல்ல நாளில்
சிக்குகிறேன்
எதிரி எமனாகிறான்
வேறொரு கெட்ட நாளில்
எமன் எதிரியாகிறான்
அதுவ‌ரையிலும்
வாழத் தான்
வேண்டியிருக்கிறது

நாலுபக்கமும் தண்ணீர்
தீவுக்குள் இருந்தாலும்
க‌வ‌லையில்லை
தண்ணீரில் மிதக்கும்வரை
இருக்கும்வ‌ரை
இற‌க்கும்வ‌ரை
அதுவ‌ரையிலும்
வாழத் தான்
வேண்டியிருக்கிறது

அறிவுகளின் கூட்டல்
கழித்தலில் எத்தனை
மிஞ்சியிருந்தாலும்
வித்தியாசமில்லா வாழ்க்கையில்
கண்ணாடி கூண்டில் நீ
நீந்திக் கொண்டு
கண்ணாடி கூண்டில் நான்
கம்ப்யூட்டர் முன் செத்துக் கொண்டு
இருந்தாலும், God damn
வாழத் தானே
வேண்டியிருக்கிற‌து!

டிஸ்கி: "யோவ் என்னய்யா இது? சுத்தமா புரியல" என சொல்லுபவர்களுக்கு நான் இந்த கவிதையை(?) டெடிகேட் செய்கிறேன்.
**************************************

சியாமளா-12: பஸ் பயணம்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11 12

ட்ரீட் கெளம்ப வேண்டிய நேரம் நெருங்கியது. அம்மாவிடம் இருந்து கால்.

"டேய், இந்த வாரம் ஊருக்கு வர்றீயா?"

"இல்லமா. நான் வரல"

"ஏன்டா? மூணு நாள் லீவ் இருக்குல்ல?"

"எனக்கு இங்க ஆயிரம் வேல இருக்கும்மா. அதெல்லாம் இப்ப சொல்லிக்கிட்டு இருக்க முடியாது. நைட் ரூம்லர்ந்து கூப்பிடுறேன். வைக்கிறேன். பை"

அஞ்சப்பர் ஹோட்டல். 15 பேர் சூழ ஒரே வேடிக்கையாய் இருந்தது. க‌ணேஷ் ப‌க்க‌த்தில் சியாம‌ளா. இந்த‌ ம‌திய‌ வேளையிலும், Eva வோ Blue Lady யோ, அதன் வாச‌னையில் ஏ.சி அறையில் க‌ணேஷ்க்கு கிறக்கத்துடன் விய‌ர்த்த‌து.

"டேட் க‌ன்ஃபார்ம் ஆயிடுச்சி தெரியுமா?" சியாம‌ளா தான் ஆர‌ம்பித்தாள். நேர‌டியாக‌ பேச‌வில்லை. கிசுகிசுத்தாள்.

"என்ன‌ டேட்? மேரேஜ் டேட்டா?" க‌த்தினான்

"மெதுவா பேசு. ஆன்சைட் ட்ராவ‌ல் டேட். க‌ம்மிங் ச‌ன்டே"

"ஓ.. ஐ ஸீ" விய‌ர்வையை ஒற்றி எடுத்த‌ப‌டியே. "இவ‌ வேற‌.. காதுக்குள்ள ரகசியம் பேசுற மாதிரி பேசுறாளே? இது வேற‌ என்ன‌ன்ன‌மோ ப‌ண்ணுது?" மைண்ட் வாய்ஸ்.

"இன்னிக்கு ஊருக்கு போக‌லாமா? ஆன்சைட் போற‌துக்கு முன்னாடி வீட்ல‌ ரெண்டு நாள் இருந்துட்டு வ‌ர‌லாம்"

"ஓ, எஸ். ப‌ட் டிக்கெட்ஸ்?" கொஞ்ச‌ நேர‌ம் முன்னாடி அம்மாவிட‌ம் இதே விஷ‌ய‌த்திற்காக‌ க‌த்திய‌து கொஞ்ச‌ம் கூட‌ நினைவில் இல்லை.

"நான் நேத்தே ந‌ம்ம‌ ரெண்டு பேருக்கும் சேர்த்து புக் ப‌ண்ணிட்டேன். பர்வீன் ட்ராவல்ஸ். ஸோ, நோ ப்ராப்ள‌ம்!" க‌ண்ண‌டித்தாள்.

இர‌வு 9.30. ப‌ர்வீன் ட்ராவ‌ல்ஸ், திண்டிவ‌ன‌ம் தாண்டி சீறிக் கொண்டிருந்த‌து.க‌ணேஷ் ப‌க்க‌த்தில் சியாம‌ளா. ப‌த்து ம‌ணிநேர‌த்திற்கும் மேலாக‌ அவ‌ளுட‌ன் முத‌ன்முறையாக‌ ஒன்றாக‌ இருக்க‌ போகிறோம் என்ற‌ எண்ண‌மே க‌ணேஷ்க்கு கிள‌ர்ச்சியாக‌ இருந்த‌து. காதலி or க‌ல்யாண‌ம் ப‌ண்ணிக்க‌ போகிறவள் கூட‌ இர‌வு நேர‌த்தில் இந்த‌ மாதிரியான‌ ப‌ஸ் ப‌ய‌ண‌ம் சொர்க்க‌ம். இதெல்லாம் ட்ரெயினில் ஏ/சி கோச்சில் த‌னித‌னி பெர்த்தில் ப‌ய‌ண‌ம் செய்தாலும் கெடைக்காது. அந்த‌ அரைகுறை வெளிச்ச‌மும், ஜ‌ன்ன‌ல் வ‌ழி வ‌ரும் குளிர்காற்றுட‌ன், ரெண்டு பேரும் ம‌ட்டும் காதுக‌ளுக்குள் பேசி கொள்வ‌து சுக‌மான‌ விஷ‌ய‌ம்.

"உன்ன‌ ப‌த்தி ஆஃபிஸ்ல‌ சொன்னாலே, எல்லாரும் டெர‌ர் ஆகுறாங்க‌ளே. ஏன்?" க‌ணேஷ் ஆர‌ம்பித்தான்.

ந‌ன்றாக‌ வாய்விட்டு சிரித்துக் கொண்டு, "என்ன‌ சொல்றாங்க‌?"

அரை நிமிட‌ம் யோசித்துவிட்டு, "ம்ம்.. அந்த‌ நியூஇய‌ர் பார்ட்டில‌ எதுக்கு ஒருத்த‌னை அடிச்ச‌?"

"அதுவா.. த‌ண்ணிய‌டிக்கிற‌ நாய், ஒழுங்கா த‌ண்ணி ம‌ட்டும் அடிச்சிட்டு போனா எதுக்கு அடிக்கிறேன். என் கூட‌ இருந்த‌ ஜூனிய‌ர் பொண்ணு துப்ப‌ட்டாவ பிடிச்சி இழுத்து க‌லாட்டா பண்ணான். பாவ‌ம், அவ அழுக‌ ஆர‌ம்பிச்சிட்டா. வ‌ந்த‌து கோவ‌ம், ப‌ளார்ன்னு அறைவிட்டேன்"

அவ‌ள் முக‌த்தை பார்க்காம‌ல், "த‌ண்ணிய‌டிக்கிற‌வ‌ங்க‌ள‌ பொத்தாம் பொதுவா நாய்ன்னு சொல்ல‌க்கூடாது. அவ‌ங்க‌ளுக்கு என்ன‌ பிர‌ச்சினையோ?"

கொஞ்சம் நேரம் பதிலே வராமல் போகவே, அவளை திரும்பி பார்த்தான்.

சியாமளா முகத்தைக் கிட்ட கொண்டு வந்து, "த்தூ" என செல்லமாக கடித்தாள். "அங்க இருந்த நெறைய்ய பேருக்கு, அவனை அடிச்சது மட்டும் தான் தெரியும். அதுக்கப்பறம் எல்லாரும் என்ன பார்த்து பயப்படுற மாதிரி நடிக்க ஆரம்பிச்சிட்டாங்க. அதுவும் எனக்கு பிடிச்சிருந்தது, அப்படியே விட்டுட்டேன்"

"அதான் ஏன்? எல்லாரையும் போல‌வே ஜோவிய‌லா, சோஷிய‌லா ப‌ழ‌க‌ வேண்டிய‌து தான‌?

"என‌க்கு அதெல்லாம் பிடிக்காது. ஆஃபிஸ்ல‌ தேவையில்லாம‌ எவ‌ன்கிட்ட‌யும் சிரிக்குற‌து பிடிக்காது. எதுக்கெடுத்தாலும் வெட்க‌ப்ப‌டுற‌தும் பிடிக்காது. கொஞ்சம் சிரிச்சி, சோஷியலா பழகுனாலே, எல்லாரும் அட்வான்டேஜ் எடுத்துக்கிறதும் செம கடுப்பு. ஸோ, நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருப்பேன். இது ஒண்ணும் த‌ப்பு இல்லையே?"

"ம்ம்.. குட். ஆமா ஹ‌ரிணி எங்க‌ போயிட்டா? ரெண்டு நாளா ஆளைப் பார்க்க‌வே முடிய‌ல‌?"

அதுவ‌ரை நார்ம‌லாக‌ பேசிக் கொண்டிருந்த‌வ‌ள், முக‌ம் டென்ஷ‌ன் ஆன‌து, "அன்னைக்கு நான் போட்ட‌ போடுல‌, பெங்க‌ளூர்க்கு ட்ரான்ஸ்ஃப‌ர் வாங்கிட்டு போயிட்டா. இனிமே அவ‌ இந்த‌ ப‌க்க‌ம் வ‌ர‌ மாட்டா. அது ச‌ரி, ஸார் பெரிய‌ ஆள் போல‌.. நெறைய்ய‌ கேர்ள் ஃப்ர‌ண்ட்ஸ் இருக்காங்க‌ளா?"

"நோ நோ" அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாக‌ ம‌றுத்தான் "அதான் நீயே பார்த்தேல்ல‌. நான் அவ‌கிட்ட‌ ஒரு வார்த்தை கூட‌ பேசின‌தே இல்ல‌. அவ‌ளா தான்..."

"ஓ.. பேசி ப‌ழ‌காமாலே நெறைய்ய‌ பேரை இன்ஃப்ளூய‌ன்ஸ் ப‌ண்ணி இருக்கீங்க‌. ம்ம் சூப்பர்" பேச்சில் நக்கல் தெறித்தது, "இதெல்லாம் இதோடு நிறுத்திக்கோ. இனிமே இதுமாதிரி நான் கேள்விப்பட்டேன், கொன்னே போட்ருவேன்"

அவ‌ன் க‌ண்க‌ள் விரிந்த‌து. ஆச்ச‌ர்ய‌த்திலும் அதிர்ச்சியிலும்.

"உன்ன‌ இல்ல‌.. அந்த‌ பொண்ணை.."

திவியின் முக‌ம் ஒரே ஒரு செக‌ண்ட் பென்டுல‌ம் மாதிரி ம‌ன‌தில் க்ராஸ் ப‌ண்ணி சென்ற‌து.

"ஹேய்ய்ய்.. என்ன‌ கோச்சிக்கிட்டீயா.. ரிலாக்ஸ்"

"ச்சே ச்சே இல்ல‌.. ம‌துரைல‌ர்ந்து எப்ப‌டி ஊருக்கு போவ‌?"

"ரொம்ப‌ அக்க‌றை போல‌. அப்ப‌டின்னா, எங்க‌ ஊர் வ‌ரைக்கும் வ‌ந்து விட‌ வேண்டிய‌து தானே?"

"அய்யோ.. உங்க‌ அப்பா, மீசைய‌ பார்த்தாலே அடிவ‌யித்துல 'ப‌க்'னு இருக்கு"

"ஹா ஹா. டோன்ட் வொர்ரீ. அப்பா கார் எடுத்திட்டு மாட்டுத்தாவ‌ணில‌ வெயிட் ப‌ண்ணுவாரு. அங்க‌ இருந்து பெரிய‌குள‌ம் போயிடுவோம்"

"ம்ம்ம்"

அப்ப‌டியே தூங்கிப் போனாள். தூக்க‌த்தில் தோள்க‌ளில் சாய்ந்துகொண்டாள். க‌ணேஷ்க்கு ரொம்ப‌ பிடித்து இருந்த‌து. கைக‌ளை எடுத்து சீட்டின் பின்னால் வைத்துக் கொண்டு அவ‌ள் தூங்குவ‌த‌ற்கு ஏதுவாக வைத்துக் கொண்டான். அவ‌ள் இன்னும் வ‌ச‌தியாக‌ சாய்ந்து கொண்டாள். கணேஷ்க்கு தூக்கம் வரவில்லை. அந்த அரைகுறை வெளிச்சத்தில், சியாமளா தூங்குவதை காதலுடன் பார்த்துக் கொண்டிருந்தான்.

அதே நேர‌ம் "கொன்னே போட்ருவேன்.. உன்ன இல்ல.. அந்த பொண்ணை" வார்த்தைகள் திடீரென நினைவில் வந்ததும் திவ்யாவை, இனிமேல் லைஃபில் நினைத்துக் கூட‌ பார்க்க‌ கூடாது. சியாம‌ளா மாதிரியான‌ பெண் லைஃப் பார்ட்னாராக‌ அடைவ‌த‌ற்கு கொடுத்து வைத்திருக்க‌ வேண்டும்.

ஆன்சைட் முடிஞ்சு வ‌ந்த‌வுட‌ன் உட‌னே அடுத்த‌ முகூர்த்த‌த்தில் க‌ல்யாண‌ தேதி குறிக்க‌ வேண்டும் என‌ யோசித்துக் கொண்டிருந்தான், ஆன்சைட்டில் ந‌ட‌க்க‌ போகும் விப‌ரீத‌ங்க‌ள் தெரியாம‌ல்

*****************************************

சியாமளா-11: கொடுத்த ஷாக்?

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10 11

திவ்யாவின் நினைவுகளில், எப்போது கணேஷ் தூங்கினான் என்று தெரியவில்லை. காலை மணி 6.30 இருக்கும். காலிங் பெல் அடித்து அடித்துக் கொண்டிருந்தது. மூன்றாவது தடவை அடிக்கும்போது எழுந்துவிட்டான். நேற்று இரவின் நினைவுகளில் இருந்து இன்னும் வராமல் ஒரு வேளை திவ்யாவாக இருக்குமோ என்ற பயத்துடன் கதவைத் திறந்தான்.

நினைத்ததை விட பயந்தான். சியாமளா நின்றிருந்தாள்(பூரிக்கட்டையுடன் வரவில்லை :). தழைய தழைய மஞ்சள் நிற பட்டுப் புடவையில். அதில் ஆங்காங்கே பெரிய பெரிய மல்லிகைப் பூ டிசைனுடன் அரக்கு கலரில் பார்டர் வைக்கப்பட்டு இருந்தது. ஒரு கணம் சியாமளாவின் அழகில் மயங்கிவிட்டான் என்பது உண்மை, "She is stunning beauty". திடீரென ஆறாவது அறிவு அலர்ட்டாக,

"ஹேய், நீ ஏன் இங்க நிக்குற‌, அதுவும் இந்த நேரத்துல? பை தி வே, You are looking great" வாயில் இருந்த வழிந்த ஜொள்ளை துடைத்துக் கொண்டே சொன்னான்.

"தேங்க்ஸ், Today is my Birthday! இந்தா ஸ்வீட்ஸ் எடுத்துக் கோ?" A2B ஸ்வீட் பாக்ஸை நீட்டினாள்.

உடனே கையை நீட்டி, "ஓ.. Happy Birthday! Many more happyyyyy.." திடீரென கையை உள்ளே இழுத்துக் கொண்டான். அப்போது தான் கவனித்தான். ஷர்ட், டீ ஷர்ட் அட்லீஸ்ட் ஒரு பனியன் கூட இல்லை. ஷார்ட்ஸ் மட்டுமே உடலில். ரொம்பவே எம்பாரஸிங் ஆனான். உள்ளே ஓடி ஒரு டவலை எடுத்து மேலே போர்த்திக் கொண்டு, மீண்டும் வாழ்த்தினான்.

"தேங்க்ஸ்" என பதிலுக்கு கையை நீட்டினாள். அவளின் உள்ளங்கை, ச்சில்லென ஐஸ்கட்டி போல இருந்தது. கொஞ்சம் என்ன நெறையவே ஸாஃப்ட்னெஸ். கணேஷுக்கு கை உதறியது. அப்போது தான் நினைவு வந்தது, "தூங்கி எழுந்ததவுடன் முகம் கூட கழுவாமல் பேசிக் கொண்டிருக்கிறோம்" என்று. இருந்தாலும் சமாளித்தான்,

"Then?"

"என்ன தென்? கெளம்பு, நாம கோவிலுக்கு போறோம்"

"கோவிலுக்கா? நான் இப்ப தான் எந்திரிச்சேன். நான் கெளம்பணும். அட்லீஸ்ட் 15 மினிட்ஸாவது ஆகும்? என் ஃபோன் நம்பர் தான் உன்கிட்ட இருக்குல்ல. ஒரு கால் பண்ணிட்டு வந்திருக்கலாம்ல"

"கொஞ்சம் ஷாக் கொடுக்கலாமேன்னு தான். நோ ப்ராப்ளம். அதுவரைக்கும் நான் வெயிட் பண்றேன்"

"எங்க?" லைட்டாக ஜெர்க் ஆனான்

"மாடியில இருக்க மாமி வீட்ல?

"ஓ.கே. நான் கெளம்பிட்டு கால் பண்றேன்"

மாமி வீட்டுக்கு போய்விட்டாள். கணேஷ் கெளம்புவதற்கு 20 நிமிடம் மேல் ஆனது. அவளும் கீழே வந்தாள். அவள் ட்ரெஸ்ஸுக்கு மேட்சிங்காக, ஸான்டல் கலர் பீட்டர் இங்க்லாண்ட் ஷர்ட்டை எடுத்து மாட்டிக் கொண்டான்.

"இன்னைக்கு ஏன் பல்ஸரில் வரல?" என்ற கேள்வியை தொண்டை வரைக் கொண்டு வந்து, அவளின் அம்சமான புடவை லுக்கை பார்த்துவிட்டு, "உன் வண்டிய என்ன ப‌ண்றது?"

"ஈவ்னிங் வந்து எடுத்துக்கறேன்"

"ஈவ்னிங்கா?"

"கோவிலுக்கு போயிட்டு, நேரா நாம ஆஃபிஸ் போயிடலாம். எனக்கு 9.30க்கு ஒரு க்ளையண்ட் கால் இருக்கு."

"எல்லாம் ப்ளான் பண்ணி தான் வந்திருக்கியா? ம்ம் நடத்து நடத்து?" என மௌனமாக பேசிக் கொண்டான். "ஓ.கே. எந்த கோவில்?"

"மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்"

"கிண்டில இருந்து மயிலாப்பூர்க்கா...? போறதுக்கே ஹால்ஃப் அன் ஹவர் மேல ஆகும்? வடபழனி முருகன் கோவிலுக்..."

"இல்ல. இப்ப மணி 7.15 தான ஆகுது. ட்ராஃபிக்லாம் இருக்காது. 20 மினிட்ஸ்ல போயிடலாம்"

"இப்பவே நான் சொல்றத கேட்கமாட்டேங்குறா. இன்னும் எவ்வளவு இருக்கோ?" மறுபடியும் மைண்ட் வாய்ஸ்.

பக்கத்திலேயே சரவணபவனில் டிஃபன் முடித்துவிட்டு, திரும்ப‌வும் அவ‌ர்க‌ள் ஆஃபிஸ் வ‌ந்த‌போது ம‌ணி 9.15.

ம‌ணி 11 இருக்கும். பாப்க‌ட், சிறுவாணி, ம‌துரை எல்லாம் சுற்றி வ‌ளைத்துக் கொண்ட‌ன‌ர். "க‌ணேஷ், ட்ரீட்?" "எங்க‌ளுக்கு ட்ரீட் வேணும்?" "இப்ப‌வே ல‌ஞ்ச் போறோம்?"

"வெயிட், வெயிட். ஃபார் வாட்?"

"இன்னைக்கு சியாம‌ளாவுக்கு ப‌ர்தேடே. ஸோ, ப‌ர்த்டே ட்ரீட்?"

"ரைட். அவ‌ளுக்கு ப‌ர்த்டேன்னா, நீங்க‌ அவ‌கிட்ட‌ தானே கேட்க‌ணும்? எதுக்கு என்கிட்ட‌ கேட்குறீங்க?"

ஓரக்கண்ணால் சியாமளாவை தேடினான். அங்கே யாருடனோ பேசிக் கொண்டிருந்தாள்.

"சியாம‌ளாகிட்ட‌ கேட்டா, கேன்டீன்ல‌ ஒரு ஜூஸ் கூட‌ வாங்கித் த‌ர‌மாட்டா. போன மாசம் ப்ரோமோஷன் வாங்குனத்துக்கு, பீட்ஸா கூட வாங்கித் தரல. உன் வுட் பீ தான‌. நீ தான் கொடுக்க‌ணும்?"

"அப்ப‌ என் ப‌ர்த்டேன்னா, அவ‌கிட்ட‌ கேட்பீங்க‌ளா?"

"நோ, நோ. அப்ப‌வும் நீ தான் த‌ர‌ணும்" எல்லாரும் கோர‌ஸ் பாடினார்க‌ள்.

"இது எந்த ஊர் நியாயம்?"

அவ‌ஸ்தையாய் நெளிந்தான். சியாமளா நேராக‌ க‌ணேஷ் இட‌த்திற்கு வ‌ந்தாள்.

சியாமளா, "ஓ.கே கேர்ள்ஸ். எல்லாரும் ல‌ஞ்ச் அஞ்ச‌ப்ப‌ர் போக‌லாம்"

அவ‌ர்க‌ளால் ந‌ம்ப‌முடிய‌வில்லை. க‌ணேஷும்.

*********************************************

சியாமளா-10: திவி (அ) திவ்யா ப்ரியதர்ஷினி!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

அடுத்த நாள், வியாழக்கிழமை. சீக்கிரம் ஆஃபிஸில் இருந்து வந்தவனுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. டூவீலரை எடுத்துக் கொண்டு, நேராக திருவான்மியூர் ஆர்.டி.ஓ ஆஃபிஸ் அருகே உள்ள முத்துவேல் வீட்டிற்கு வந்தான்.

"என்ன நீயா?" செயற்கையாக ஷாக்காகி போனது போல் நடித்தான். வீட்டை விட்டு கொஞ்சம் வெளியே வந்து இவன் தனியாகத் தான் வந்தான் என உறுதி செய்துகொண்டான்.

"நானே தான். ரொம்ப போர் அடிக்குது. பீச் போகலாமா?"

"வந்துட்ட. வேற வழி?" என புலம்பிக் கொண்டே இருவரும் பீச் கெளம்பினர்.

பீச்சில் வண்டியை பார்க் செய்துவிட்டு, கடலின் அலை அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது முத்துவேல்,

"த‌ம் அடிக்கிறீயா?"

"இல்ல‌. என‌க்கு வேணாம்"

"மேரேஜ் ஃபிக்ஸ் ஆன‌துல‌ இருந்து நீயும் ஒரு ரேஞ்சா தான் இருக்க‌. என‌க்கு நேர‌ம் வ‌ரும்டா. சியாமளா டார்ச்ச‌ர் தாங்க‌ முடியாம‌ த‌ண்ணி அடிக்க‌ நீ என்ன‌ கூப்பிடுவேல்ல‌, அப்ப‌ வ‌ச்சிக்குறேன்"

"முத்து, நீ இங்கேயே இரு. நான் போய் சோன் ப‌ப்ப‌டி, கார்ன் ஏதாவ‌து கொறிக்கிறதுக்கு வாங்கிட்டு வ‌ரேன்"

வ‌றுத்த‌ க‌ட‌லை வாங்கிக் கொண்டிருந்தான். திரும்பும்போது, பார்க்கிங் ஏரியாவில் ஒருவ‌ன் உள்ளே வ‌ண்டியைத் திருப்பிக் கொண்டிருந்த‌ போது, அதை க‌வ‌னிக்காம‌ல் க‌ணேஷ் குறுக்கே வ‌ந்த‌தும், ச‌ட‌ன் ப்ரேக் அடித்தான்.

"டேய்.. " என அவன் அசிங்க‌மாக‌ திட்ட‌ ஆர‌ம்பிக்க‌ போகும்போது ந‌டுவே இடைவெளிவிட்டு, ஹெல்மெட் க‌ண்ணாடியை தூக்கிவிட்டுக் கொண்டு, "க‌ணேஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ்... " என‌ முடித்தான்.

க‌ணேஷுக்கு யார் என‌த் தெரிய‌வில்லை. முக‌த்தில் ஆச்ச‌ர்ய‌ ரேகைக‌ள் ப‌ர‌விக் கொண்ட‌து. அவ‌ன் பின்னால் வேற‌ ஒரு ஃபிக‌ர் இருந்தாள்.

"டேய், நான் தான் தினேஷ்" என‌ அவ‌ன் சொல்வ‌த‌ற்கும், ஹெல்மெட்டை கழற்றிய‌ நேர‌த்திற்கும் ச‌ரியாக‌ இருந்தது.

க‌ணேஷுக்கு ஆச்ச‌ர்ய‌ம். நான்கு வ‌ருட‌ பொறியிய‌ல் க‌ல்லூரி வாழ்க்கையில் கிடைத்த நிறைய ஃப்ரெண்ட்ஸில் ஒருவன். க‌ல்லூரி முடிந்து நான்கு வ‌ருட‌த்திற்கு அப்புற‌ம் இப்போது தான் பார்க்கிறான்.

"தினேஷ், எப்ப‌டி இருக்க‌?"

"ஃபைன்டா. நீ எப்ப‌டி இங்க‌? நீ யு.எஸ் போயிட்ட‌தா கேள்விப்ப‌ட்டேன்"

"யெஸ், ப‌ட் நான் த்ரீ ம‌ன்த்ஸ் முன்னாடியே வ‌ந்துட்டேன். இங்க‌ தான் என் ஃப்ரெண்ட் வீடு இருக்கு. அப்ப‌டியே சும்மா வாக் வ‌ந்தோம். உன‌க்கு க‌ல்யாண‌ம்ன்னு கேள்விப்ப‌ட்டேன்"

"ஆமான்டா. இவ‌ தான்" என‌ பின்னால் இருந்த‌வ‌ளுக்கு இன்ட்ரோ கொடுத்தான். மொபைல் ந‌ம்ப‌ர் மாற்றிக் கொண்ட‌ன‌ர்.

"க‌ண்டிப்பா க‌ல்யாண‌த்துக்கு வ‌ந்திட‌ணும்."

"ஓ.கேடா, ஷ்யூர்" என கணேஷ் சொல்லிக் கொண்டிருந்த‌போதே தினேஷ் அவ‌ன் க‌ண்க‌ளை ஒரு வித‌ த‌ய‌க்க‌த்துட‌ன் பார்த்துக் கொண்டிருந்தான்.

"திவ்யா, எப்ப‌டிடா இருக்கா?"

மொபைலில் அவ‌ன் ந‌ம்ப‌ரை ஸ்டோர் ப‌ண்ணிக் கொண்டிருந்த‌வ‌ன், ச‌ரியாக‌ க‌வ‌னிக்க‌வில்லை, "எந்த‌ திவ்யா?"

"திவ்யாடா, திவ்யா ப்ரிய‌த‌ர்ஷினி. ம‌ற‌ந்துட்டீயா?"

லேசாக‌ அதிர்ச்சியானான். ம‌ன‌தினுள், "கிருஷ்ணகிரி, பர்கூர், க‌வ‌ர்ன்மென்ட் இன்ஜியனிய‌ரிங் காலேஜ், கேன்டீன், ப்ராக்டிக‌ல் லேப், ஹாஸ்ட‌ல், தியேட்ட‌ர், கோவில்" எல்லாம் ஃப்ளாஷ் அடித்துக் கொண்டிருந்த‌து.

கணேஷின் தோள்க‌ளைப் பிடித்து லைட்டாக‌ உலுக்கினான் தினேஷ்.

"இல்ல‌டா. தெரியல‌. ரொம்ப‌ நாளா கான்டாக்ட்ல‌ இல்ல‌"

"ம்ம்.. ரொம்ப நாள் முன்னாடி, என‌க்கு இமெயில் அனுப்பி இருந்தா. ஃபாரின்ல ஹையர் ஸடடீஸ் பண்ணிக்கிட்டு இருக்கிறதா சொல்லி இருந்தாள். உன்ன‌ ப‌த்தியும் கேட்டிருந்தா. உன் கார்ப்பரேட் இமெயில் ஐடியும் அனுப்பி இருந்தேன். நீங்க‌ அதுக்க‌ப்புற‌ம் கான்டாக்ட்ல‌ தான் இருப்பீங்க‌ன்னு நென‌ச்சேன். ஸாரி"

"இட்ஸ் ஓகே"

"ஓ.கேடா. நாங்க‌ கெள‌ம்புறோம்"

முத்துவேலுட‌ன் கொஞ்ச‌ நேர‌ம் பீச்சில் இருந்துவிட்டு, நேராக‌ வீட்டுக்கு வ‌ந்துவிட்டான். அவ‌ச‌ர‌ம் அவ‌ச‌ர‌மாக‌ த‌ன்னுடைய‌ பெரிய‌ சூட்கேஸைத் திற‌ந்தான். எல்லாத் துணிக‌ளையும் வெளியில் எடுத்து அடியில் இருந்த‌ ஆட்டோகிராஃப் நோட்டை எடுத்தான்.

திவ்யா எழுதிக் கொடுத்த‌ ப‌க்க‌த்திற்கு வ‌ந்தான்.

"லைஃபில் எதையும் மிஸ்
ப‌ண்ண‌க்கூடாது என‌ நினைத்த‌தில்லை,
உன்னுட‌ன் ப‌ழ‌கும் வ‌ரை!"
-Divi

என‌ ஆங்கில‌த்தில் எழுத‌ப்ப‌ட்டிருந்த‌து.

அந்த‌ ப‌க்க‌த்தின் ந‌டுவே முக‌த்தை வைத்து முக‌ர்ந்தான். ப‌ழைய‌ நாட்க‌ள் க‌ண்முன்னே ஓடிக் கொண்டிருந்த‌து, க‌ணேஷ் க‌ண்க‌ளில் இர‌ண்டு துளி க‌ண்ணீர்

*****************************************************

ரேனிகுண்டா!

20 வயதுக்குள்ளான நான்கு இளைஞர்கள் OR சிறுவர்கள். இவர்கள் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல் வழக்குகளில் அடிக்கடி ஜெயில் வந்து செல்லும் ரெகுலர் விசிட்டர்ஸ். காவலர்களையே மிரட்டி அதட்டும் அளவுக்கு தைரியசாலிகள். இந்த க்ரூப்பில் புதிதாக ஒருவன் வருகிறான். அப்பா, அம்மாவை நடுரோட்டில் சாகடித்தவனை, கத்தி எடுத்துபோய் கொல்லமுடியாமல் ஜெயில் வந்து சேர்ந்த அப்பாவி. சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக, அந்த நான்கு பேருடன் சேர்ந்து ஐந்தாவது ஆள் ஆகிறான்.

ஜெயிலில் இருந்து தப்பித்து மும்பை போக முயற்சி செய்து பாதி வழியிலேயே இறங்கி ரேணிகுன்டாவில் செட்டில் ஆகிறார்கள். அங்கு அப்பாவிக்கு மலரும் காதல். முடிவில் ரத்தக்களரியான க்ளைமாக்ஸ். கேட்பதற்கு சாதாரணமான கதை என்றாலும், அவர்கள் ப்ரெஸன்ட் பண்ணவிதம், அட்ட‌காசம்.

வழக்கமாக பார்த்த சலித்த நடிகர்கள் இல்லாமல் அனைவரும் புது முகம். அந்த ஐந்து பேரையும் எங்கே இருந்து பிடித்தார்கள் என்று தெரியவில்ல. 'அப்பாவி' மாதிரியான பையன் தான் ஹீரோ('நிக் ஆர்ட்ஸ்' எஸ்.எஸ்.சக்கரவர்த்தி மகன்?) என்று நினைக்கிறேன். அவனுக்கு மட்டும் தான் காதல், ஹீரோயின் என தனி எபிசொட் எல்லாம் இருக்கிறது. காதல் காட்சிகளிலும், முகத்தை ஒரு மாதிரி இறுக்கமாக வைத்திருப்பது ஏனோ? முதலில் அந்த பசங்களுடன் ஒட்ட முடியாமல் தவித்து, க்ளைமேக்ஸுக்கு முன்னால் இரண்டு பேரை கொல்லும் இடத்தில் முகத்தில் ரியல் ரௌத்திரம் தெறிக்கிறது.

கால்கள் X மாதிரி வளைந்த குள்ளமான 'டப்பா' கேரக்டரின் டயலாக் டெலிவரி, டைமிங் கமெண்ட்ஸ், சூப்பர். படத்தின் செமத்தியான என்டெர்டெயின்மென்ட் அவர். அதிலும் க்ளைமேக்ஸில் போலீஸிடம் மாட்டிய போது, அவர் முகத்தில் தெரியும் மரணபயம், அருமையான நடிப்பு.

கொஞ்சம் குண்டாக, வளர்ந்த 'பாண்டு' கேரக்டர், இந்த க்ரூப்பின் தலைவன் ரோலுக்கு நல்ல பொருத்தம். ஹீரோவின் காதலுக்காக, கடைசி அசைன்மென்டில் அவனை தள்ளி நிற்க சொல்வது, ஹீரோயின் அக்காவிடம் அவனுக்காக பேசுவது என நெஞ்சில் நிற்கிறார்.

ஹீரோயின் அக்காவின் பாத்திரப்படைப்பு, டைரக்டரின் அசாத்திய துணிச்சல். முதல் படத்திலேயே, இப்படி ஒரு கேரக்டரை உலவ விட்டதற்கு 'தில்' வேண்டும். ஆனால் அவர் ஹீரோயினை ஏன் வாய் பேச முடியாமல் வைத்தார் என தெரியவில்லை.

பெற்றோரைக் கொன்றவனை நடுரோட்டில் கத்தியை எடுத்து நெஞ்சில் குத்தும்போதும், ரேணிகுன்டா அரசியல்வாதியைக் கொன்றதை, ஒருவனிடம் 'டெமோ' காட்டியபோதும் என்னையும் அறியாமல் கைதட்டினேன், ரசித்தேன். என் ரத்தத்திலும் வன்முறை அதிகமாக இருக்கிறது என நினைக்கிறேன்.

ஹீரோவின் பாய்ண்ட் ஆஃப் வியூவில் தான் கதை நகர்கிறது. அவரின் மோசமான, சந்தோஷமான‌ சம்பவங்களின் போது, மழையையும் கையோடு கூட்டி சென்றது, கவிதை.

காதல் காட்சிகளின்போது, லைட்டாக போர் அடித்தது. அதே போல் பாடல்களும். முதலில் வரும் சிம்பு பாடிய 'மாட்டுத்தாவணி' பாடல் மட்டும் ஓ.கே.

க்ளைமேக்ஸ், வழக்கமான ரவுடியிஸ படங்களில் வரும் ஒன்று தான்.

மொத்ததில் இந்த படம், எனக்கு பிடித்து இருந்தது. 'ஈரம்' படத்திற்கு அடுத்து நீண்ட இடைவெளிக்கு பிறகு வந்த உருப்படியான ஒரு திரைப்படம்

*****************************************************

காதல் டூ கல்யாணம் - பட்டர்ஃப்ளை எஃபெக்ட்!

இடம்: மதுரை, திருமங்கலம்.
நேரம்: மாலை 5 மணி, ஒரு நாள்

"அப்பா, ஒரு முக்கியமான விஷயம்"

காலையில் வந்த தினமணியின் கட்டுரையில் மூழ்கியிருந்தவர், மூக்குக் கண்ணாடியை சரிசெய்து கொண்டே தலையை நிமிர்த்தினார்

"என்னப்பா?"

"நான் ஒரு பொண்ணை காதலிக்குறேன்"

"ம்ம்ம், எத்தனை நாளா?"

"மூணு வருஷமா"

"மூணு வருஷமா பண்ணிக்கிட்டு இருக்குறத இப்ப மட்டும் சொல்றதுக்கு என்ன காரணம்?"

"அந்த பொண்ணை கல்யாணம் பண்ணிக்கலாம்ன்னு ஆசைப்படுறேன்"

"ம்ம்ம், அந்த பொண்ணு எந்த ஊரு, எப்படிப்பட்ட குடும்பம்"

"கோயம்புத்தூர். அப்பா, ஆர்.டி.ஓ. அவங்க ஃபேமிலில மொத்தமே மூணு பேர் தான்"

"ம்ம்ம்.. பெரிய இடம் மாதிரி தெரியுது"

தினமணியை மடித்துவைத்து விட்டு, கண்ணாடியையும் கழற்றினார். 25 வருடங்களுக்கும் மேலாக ஓடிக் கொண்டிருக்கும் ஆசிரியர் பணியில், ரிட்டையர்டு ஆகும் நாளை நோக்கிக் காத்துக் கொண்டிருக்கிறார். ஒரு வித அயர்ச்சி, ஆயாசம் முகத்தில் இழையோடியது

"இந்த செந்தில்குமார் வாத்தியாருக்கு உங்களையும் தவிர, ஒரு பொண்ணு இருக்கா. அவளுக்கு ஒரு நல்ல இடத்துல கல்யாணம் பண்ணிக் கொடுக்காம, குடும்பத்துல மூத்த வாரிசு நீ இப்படி பேசுறது......"

"இல்லப்பா. நான் தங்கச்சி கல்யாணத்தை பத்தி பேசுறதுக்கும் தான் வந்திருக்கேன்"

" " நரைத்த புருவ முடிகளை ஆச்சர்யக்குறிகளாக்கி அவனை ஏறெடுத்து பார்த்தார்.

"ஆமாப்பா........"

இடம்: தேனி, சின்னமனூர்
நேரம்: மாலை 6 மணி, அதே நாள்

களத்துமேட்டில் ஒரு சேரில் உட்கார்ந்து மேற்பார்வையிடும் அப்பாவிடம், பையன்

"அய்யா, நைட் ட்ரெயினுக்கு நான் ஊருக்கு கெளம்புறேன்"

"நல்லது தம்பி. இனிமே மீசைய மழிச்சிட்டு ஊருப்பக்கம் வராதீங்க. இந்த பிரசிடென்ட் சின்னச்சாமிக்கு ஊரு மக்க கொடுக்கிற மரியாதைய உங்களுக்கும் கொடுக்கணும்"

"ஆகட்டும்யா.. அய்யா.. வந்து.. அய்யா... நம்ம கற்பகம் கல்யாணம் விசயமா?"

"இப்பயே அந்த சின்ன கழுதை கல்யாணத்துக்கு என்ன அவசரம்?"

"இல்லைய்யா. அவ ஒரு பையன விரும்புறா.. விசாரிச்சி பார்த்தேன்.. தஞ்சாவூர்ல பெரிய அரிசி மண்டியும், 50 ஏக்கர் வயக்காடும் இருக்கு. பையனும் சென்னையில ஆட்டோமொபைல் கம்பெனில‌ வேல பாக்குறான்"

"ம்ம்ம்.. இவ்வளவு விசாரிப்புகளை பண்ணிப்புட்டு வந்து தான் நிக்குறீங்களாக்கும். நல்லது. இப்பவே திடீர்ன்னு தங்கச்சி கல்யாணத்தை பத்தி நீ அக்கறப்படுறது சந்தோஷமத்தான் இருக்கு"

"இல்லைய்யா....அது வந்து.."

"என்ன இன்னும் இழுக்கிறீங்க"

"நானும் ஒரு பொண்ண விரும்புறேன்"

"அப்படிப் போடு அருவாளை"

"நல்ல இடம் தான். என்கூட தான் வேலை பாக்குறா. மதுரை திருமங்கலம் வாத்தியார்.......... "

"சந்தோசம். எனக்கு வேலையே இல்லாம பண்ணிப்புட்டீங்க ரெண்டு பேரும். ரொம்ப சந்தோசம்"

இடம் 3: தஞ்சாவூர் பெரிய தெரு.
நேரம்:இரவு 7 மணி, அதே நாள்

தன் ஒரே மகனின் கல்யாணத்துக்காக ப்ரோக்கரிடம் வாங்கிய ஃபோட்டோக்களை, பையனிடம் நீட்டினார் அம்மா.

ஃபோட்டோக்கள் கவரை பிரித்துக் கூட பார்க்காமல், "அம்மா, நான் ஒரு பொண்ணை லவ் பண்றேன். பொண்ணோட அப்பா தேனி, சின்னமனூர்ல ப்ரசிடெண்டா இருக்கார்"

"அப்பாடா, வேலை மிச்சம். அடுத்த வாரமே, பொண்ணு பார்க்க கெளம்பிடலாம்"

"வேணாம்மா"

"ஏன்?"

"நாளைக்கே கெளம்பலாம்"

************************************

முத்த யாசகன், சொன்னவன் கடவுள்

முத்த யாசகன்!

உன் இதழ்களில்
மூச்சு வாங்கும்
முத்த மிச்சங்களையும்
மிச்ச முத்தங்களையும்
மொத்தமாக யாசகம் பெற
முடியாமல்
முடியாமலே இருக்க கூடாதென்ற‌
முடிவில் உனக்காக‌ இந்த
முத்தக் கவிதை என்
முத்தங்களுடன்!

......................

ரகசியங்களின் ரகசிய உரையாடல்!


இதயம் எகிறி துடித்து
மின்சாரம் காதுகளில் பரவ‌
பரவசத்தில் லேசாக
வேர்வை வெளிறி
கண்களில் அவசர அலைபாய
நாக்கு வறண்டது
நல்ல வேளை இரண்டு
நிமிடத்தில் முடித்துவிட்டாள்
ரகசியங்கள் காதருகில்
சொல்லப்பட வேண்டுமென
சொன்னவன் கடவுள்

தினந்தந்தியின்
தலைப்பு செய்திகளை உன்
தலையின் கற்றை முடிகள்
தாண்டி நான் சொல்ல
நினைத்த‌போது
நாக்கு தந்தி அடித்தது
யார்ட்லியோ லாவண்டரோ என‌
மூக்கு வியர்த்தது
ரகசியங்கள் காதருகில்
சொல்லப்பட வேண்டுமென
சொன்னவன் கடவுள்

**************************************

சியாமளா-9: "ஏன்?" புலம்பல் வாக்குமூலம்!

கணேஷ்-சியாமளா.. 1 2 3 4 5 6 7 8 9 10

கணேஷ்க்கு காற்றில் பறப்பது போல் இருந்தது. இந்த சந்தோஷத்தை உடனே கொண்டாட வேண்டும் போல இருந்தது. உடனே நினைவில் வந்தான் நண்பன் முத்துவேல்

"முத்து, என்ன பண்ணிக்கிட்டு இருக்க? ஈவ்னிங் ஃப்ரீயா?"

"கொஞ்சம் ஃப்ரீ தான்டா. என்ன மேட்டர்?"

"கெளம்பி எங்க ஏரியா வா. நைட் தண்ணி அடிக்கலாம்?"

"வேணான்டா.. கடைசில சியாமளா வந்து கதவை தட்டுவா, மொத்த சரக்கும் இறங்கிடும். உங்க போதைக்கு நான் ஊறுகாயா?"

"அத பத்தி வொர்ரீ பண்ணாத மச்சி. நாம இன்னைக்கு ஏசி பார் போயிடலாம்?"

"மாமா, SMS படம் பார்த்து இருக்கேல்ல.. அந்த ஹீரோயின் மாதிரி நேரா பாருக்கு வந்துடுவா அவ. அவ பொறுக்கிடா"

"அடி செருப்பால.. யாரை பார்த்து பொறுக்கிங்கிற. அவ என் ஆளு, நான் கட்டிக்கப் போறவ. மரியாதையா பேசு"

"வேணும்டா வேணும் எனக்கு இன்னும் வேணும். எப்ப நீ அவளை தான் கட்டிக்கப் போறேன்னு சொன்னீயோ அன்னைக்கே உன் ஃப்ரெண்ட்ஷிப்ப கட் பண்ணி இருக்கணும்"

"விடு ம‌ச்சி, இதுக்கெல்லாம் டென்ஷ‌ன் ஆனா எப்ப‌டி? நாம‌ என்ன‌ அப்ப‌டியா ப‌ழ‌கிருக்கோம். நீ மட்டும் இப்ப வ‌ந்தா ஏசி பார் ஃபுல் செல‌வை நான் ஏத்துக்கிறேன்"

"ம்ம்ம்.. இது ஒரு ந‌ல்ல ப்ரோப்பஸல். ஆனா..இந்த‌ மாதிரி எல்லாம் உன்ன‌ நான் பாருக்கு கூப்பிட்டு போனேன்னு தெரிஞ்ச‌துன்னா, சியாம‌ளா என்ன‌ அடிப்பா மாமா"

"நீ இப்ப‌ வ‌ர‌லைன்னாலும் அடிப்பா. நீ நைட் த‌ண்ணி அடிக்க‌ கூப்பிடுறேன்னு அவ‌கிட்ட‌ சொன்னேன்னு வ‌ச்சிக்கோ......."

"ரைட் மாமா.. நான் 8 ம‌ணிக்கு உன்ன‌‌ வீட்ல‌ வ‌ந்து பிக்க‌ப் ப‌ண்ணிக்குறேன். எப்ப‌டியெல்லாம் மிர‌ட்டுறீங்க‌, ந‌ட‌த்துங்க‌டா ந‌ட‌த்துங்க‌"

லைனை க‌ட் ப‌ண்ணிவிட்டான் முத்துவேல்

"இதெல்லாம் கூட‌ ந‌ல்லா தான் இருக்கு" என்று ம‌ன‌துக்குள்ளே ர‌சித்தான் க‌ணேஷ்

இர‌வு 8.45 ம‌ணி. அரைகுறையான‌ ம‌ங்க‌லான‌ வெளிச்ச‌த்தில் ஒரு ஆஃப் சிக்நேச்ச‌ர் பாட்டில் இர‌ண்டு பேர் உட‌லிலும் ச‌ரி பாதியாக‌ இற‌ங்கி இருந்த‌ நேர‌த்தில் ஆர‌ம்பித்தான் முத்துவேல்

"ஏன்டா, பிடிக்க‌ல‌ பிடிக்க‌ல‌ன்னு கீற‌ல் விழுந்த‌ டேப் ரிக்கார்ட‌ர் மாதிரி க‌த்திக்கிட்டு இருப்ப‌.. இப்ப‌ என்ன‌ ஆச்சி?"

"சிம்பிளான‌ ஒரு லாஜிக் தான்டா. ஒரு பொண்ணு அசிங்க‌ப‌டுத்திட்டா, கன்னாபின்னான்னு க‌லாசுனா, ப‌ச‌ங்க‌ யாருக்கும் பிடிக்காது. நானும் 'என்ன‌ இவ‌ள‌ பைய‌ன் மாதிரி யாருக்கும் அட‌ங்காம‌ வ‌ள‌ர்த்து இருக்காங்க‌, என்ன‌ ஜென்ம‌ம்' அப்ப‌டியெல்லாம் யோசிச்சி இருக்கேன்"

"இப்ப‌ என்ன ஆச்சி? இப்ப மட்டும் எப்ப‌டி அவ‌ள‌ பொண்ணுன்னு ந‌ம்புன‌?"

"இன்னிக்கு வ‌ரைக்கும் அவ‌கிட்ட‌ நான் த‌னியா ப‌த்து நிமிஷ‌ம் கூட‌ பேசுன‌து இல்ல‌. அன்னைக்கு ஹோட்ட‌ல் கூப்பிட்டு போய் என்னை கிண்ட‌ல் ப‌ண்ண‌தோடு ச‌ரி"

"அப்புற‌ம் அன்னைக்கு ம‌ட்டும் ஏன் உன் வீட்டுக்கு வ‌ந்தா? ரெண்டு பேரும் பேசாம என்ன பண்ணீங்க? மாமா, இந்த‌ ட‌கால்டி வேலையெல்லாம் என்கிட்ட‌ காட்டாத‌"

"முத்து, இந்த‌ மாதிரி நீ பேசிக்கிட்டே இருந்தேன்னு வ‌ச்சிக்கோ, நான் சியாம‌ளாவுக்கு ஃபோன் ப‌ண்ணி உன்கிட்ட‌ கொடுத்திடுவேன். கொஞ்ச‌ம் நேர‌ம் மூடிட்டு, நான் சொல்ற‌த‌ கேளு"

"உன்கூட‌ த‌ண்ணி அடிக்க‌ வ‌ந்தேன் பாரு, என்ன‌ சொல்ல‌ணும்"

"கோச்சிக்காத‌ ம‌ச்சி.. எங்க‌ விட்டேன்.. ஆங்.. ஆனா என் மேல‌ அவ‌ளுக்கு அப்ப‌டி இரு இன்ட்ர‌ஸ்ட். நான் ச்சும்மா ஹ‌ரிணின்னு ஒரு பொண்ண‌ ல‌வ் ப‌ண்றேன்னு தான் சொன்னேன். அதே பேர்ல‌ என் ப‌ழைய‌ ஆஃபிஸ்ல‌ இருந்து ஒருத்தி வ‌ருவான்னு நான் கூட நென‌ச்சி பார்க்க‌ல‌. ஆனா பாரு ம‌ச்சி, சியாம‌ளா என்ன‌ டென்ஷ‌ன் ஆனா தெரியுமா?"

""

"எவ்ளோ டென்ஷ‌ன் ஆனான்னு கேளு ம‌ச்சி?"

"ஏன்டா கேட்டாலும் திட்டுற, கேக்க‌லைன்னாலும் திட்டுற‌. ஓசிக்குடி குடிக்க‌ வ‌ந்த‌து ஒரு குத்த‌மா?"

"ச‌ரி நானே சொல்றேன். ஹ‌ரிணியும் சும்மா இல்லாம‌, என்னோட பழைய ஆஃபிஸ் வீர‌ தீர‌ செயல்களை ப‌ற்றி பெருமையா பேசிட்டு இருந்தா. நானும் ஃப‌ர்ஸ்ட் ஆர்வ‌ம் இல்லாம‌ கேட்டுட்டு இருந்தாலும், ஒரு க‌ட்ட‌த்துல‌ நானும் அவ‌ கூட‌ பேச‌ ஆர‌ம்பிச்சேன்"

"ஒரு நிமிஷ‌ம், அது என்ன‌ செய‌ல்க‌ள்?"

"வீர‌ தீர செயல்கள் ம‌ச்சி. அதான்டா கிரிக்கெட் மேட்ச், ஸாங் பாடினது, த‌ண்ணி அடிச்ச‌து"

"த்தூ, இதெல்லாம் சொல்ற‌துக்கு உன‌க்கே வெட்க‌மா இல்ல‌, ச‌ரி மேல‌ சொல்லு. சியாமளா ஹ‌ரிணிக்கு ரெண்டு அறை விட்டாளா இல்ல‌ உன‌க்கா?"

"ஹெய்ஹேய், நான் யாரு? என்ன‌ போய் அடிப்பாளா? இப்ப‌டி நாங்க‌ பேசிக்கிட்டு இருக்கும்போது அவ‌ ரியாக்ச‌னை பார்க்க‌ணுமே, அப்ப‌டியே டென்ஷ‌ன்ல‌ செமத்தியா க‌டுப்பாயிட்டா. அதுக்கெல்லாம் என்ன‌ கார‌ண‌ம்? ல‌வ் ம‌ச்சி ல‌வ். அப்ப‌ க‌த்துனா பாரு ஒரு க‌த்து, "எக்ஸ்கியூஸ் மீ" அப்ப‌டின்னு?"

"'க‌ணேஷ் நான் க‌ட்டிக்க‌ போற‌வன்'னு கத்தி சொன்னா. அப்ப‌ எல்லாரோட‌ ரியாக்ச‌ன் பார்க்க‌ணுமே. ச்சான்ஸே இல்ல. அந்த‌ ல‌வ், பொஸ‌ஸிவ்னெஸ் தான் என்னை என்ன‌மோ ப‌ண்ணிருச்சி ம‌ச்சி. இனிமே அவ‌ ர‌வுடி என்ன‌? பேய் பிசாசா இருந்தாக் கூட‌ நான் அவ‌ளைக் க‌ல்யாண‌ம் ப‌ண்ணிப்பேன்"

"என்ன‌க் கொடுமை மாமா இதெல்லாம்? சியாம‌ளாவா இப்ப‌டி ப‌ண்ணா? ஆச்ச‌ர்ய‌மா இருக்கு? ப‌ளார் ப‌ளார்ன்னு உன‌க்கு ரெண்டு அறை விட்டுருப்பான்னு நென‌ச்சேன், ஜ‌ஸ்ட் மிஸ்"

"இதென்ன‌ ஆச்ச‌ர்ய‌ம். இதுக்கு மேல‌ இன்னொன்னு சொன்னேன்னு வ‌ச்சிக்கோ, நீ அப்ப‌டியே ஷா...க் ஆகிடுவே. அடிச்ச‌தெல்லாம் இற‌ங்கிடும்"

"இப்ப‌வே பாதி இற‌ங்கிடுச்சி. சொல்லு. வேணாம்ன்னு சொன்னா விட‌வா போற‌?"

"நாங்க ரெண்டு பேரும் ஒண்ணா, ஒரே இட‌த்துக்கு நெக்ஸ்ட் வீக் ஆன்சைட் போறோம்?"

த‌ம்மை ப‌ற்ற‌ வாயில் எடுத்து வைத்த‌வ‌ன், நான் சொன்ன‌தைக் கேட்டு அதிர்ச்சியில் கீழே போட்டுவிட்டான்

"என்ன‌ மாமா சொல்ற‌? க‌ல்யாண‌த்துக்கு முன்னாடியேவா?"

ஆமாம் என்ப‌து போல் க‌ண்ண‌டித்தான் க‌ணேஷ்

"ச‌ரி, கம்பெனி பாலிஸில ரெண்டு பேரா போயிட்டு, திரும்ப‌ " வரை சத்தமாக சொல்லிவிட்டு, "மூணு பேரா வ‌ர்ற‌த்துக்கு இடம் இருக்குமா?" என கடைசியில் முனகினான்

"வாட்?"

"ஆமா நீங்க‌ ஒண்ணும் தெரியாத‌ பாப்பா நீ, வாயில‌ விர‌ல‌ வச்சாக் கூட‌ க‌டிக்க‌ தெரியாது. இப்ப‌டியா க‌ல்யாண‌ம் ஆகாத‌ ஒருத்த‌ன‌ க‌ன்னாபின்னான்னு டென்ஷ‌ன் ஆக்குற‌து?"

"விடு ம‌ச்சி க‌வ‌லைப்ப‌டாத‌. நாம‌ நாளைக்கும் த‌ண்ணி அடிக்க‌லாம்?"

"அட‌ப் போங்கடா.. நீங்க‌ளும் உங்க‌ ல‌வ்வும். உன்கூட‌ த‌ண்ணி அடிக்கிற‌துக்கு நான் குப்புற‌ ப‌டுத்து சிவனேன்னு தூங்குவேன்" என‌ த‌லை தெறிக்க‌ ஓடினான்.

"வெண்ணில‌வே வெண்ணில‌வே
விண்ணைத் தாண்டி வ‌ருவாயா?
விளையாட‌ ஜோடி தேவை"

என‌ ஹ‌ரிஹ‌ர‌ண் டைமிங்காக‌ எஃப்.எம்மில் பாடிக் கொண்டிருக்க‌ க‌ணேஷ் வீடு வ‌ந்து சேர்ந்தான்.

************************************

Related Posts with Thumbnails