வெற்றிடம் மாறி
வெற்றிடம் மட்டுமே
குடிபுகும் நாட்களில்
உனக்காகக் காத்திருக்கிறேன்
இதயத்தில் நீ
குடிவரும் நாளில்
உனக்கான பெயர்
தேவதை
அரைகுறை வேலைதான்
எப்போதும்
உன் நெருக்கத்தில்
உதடுகளின் ரேகைகளை
எண்ணும் வேலையிலும்
பாதி தாண்டும் முன்
மறந்துவிடுகின்றேன்
அழித்துவிடலாம் என
என் உதடுகளுக்கு
வேலைமாற்றம் கொடுத்தபோது
ரேகைகள் இடமாற்றம்
ஆகின்றன
கடிக்காதே
இறக்கைகள் மட்டுமல்ல
தேவதைகளுக்கு பற்களும் உண்டு!
எதிர்ப்படும் பெண்களை
எட்டிஎட்டி கண்டுகளிக்கும்போது
ரசிக்கிறவள் தோழியாகிறாள்
அவள்
எட்டிஎட்டி உதைக்கும்போது
தேவதையாகிறாள்!
அவசர தடுப்பு சட்டம்
பரவி வருகிறது
காவல்நிலையத்தில்
இரண்டு புகைப்படங்கள்
வதைத் தடுப்பு சட்டத்தில்
உன் அண்ணன்
தேவதைத் தடுப்பு சட்டத்தில்
உன் அப்பா
*******************
தேவதை கவிதைகள் - 2
தேவதை கவிதைகள்-1
எனக்காக ரோஜாக்களை
ஏந்தி வரும் நாளில்
உன் பெயர்
தேவதை!
சிரிப்பைக் கேட்டால்
வெட்கப்படுகிறாள்
வெட்கத்தைக் கேட்டால்
முத்தமிடுகிறாள்
முத்தத்தைக் கேட்டால்
உதைக்கிறாள்
பிரச்சினை தேவதைகளின்
காதுகளிலா
காதலிலா?
தேவதைக்கும் எனக்கும்
பந்தயம்
அவள் சொன்னாள்
”என்னை வெட்கப்பட வைக்க முடியாது?”
நான் கேட்டேன்
”ஏன் முடியாது?”
சரி பார்க்கலாம் என
அவள் கோபத்தில் சிவக்க
ஆரம்பித்தது பந்தயம்
ஒரே ஒரு கேள்வியில்
தோல்வியை ஏற்றுக் கொண்டாள்
வெட்கப்பட்டுக் கொண்டே!!!!
நான் கேட்டதெல்லாம்
“நீ தேவதையான நாள் என்னைக்கு?”
மட்டுமே
(தேவதை கவிதைகள், தேவதை வரும்வரை தொடரும்)
*************************************
சிவப்பில் வளர்ந்த சிவப்பு
வெள்ளிபுகையின் நடுவே
அதிகாலைப் பனியில்
வெட்கத்தில் சிவப்பவளும்
கோபத்தில் சிவப்பவனும்
முட்டிக் கொண்டபோது
பார்வைகளில் பாஸ்பரஸ்
பற்றிக் கொள்ள
வார்த்தைகள் வளர
வெள்ளைக் கொடி பறந்தது
சிவப்பவளும் சிவந்தவனும்
சிவப்பதை சிறிதுநேரம்
மறந்துவிட்டனர்
கடுப்பில் சிவந்த சிவப்பு
இடமாற்றமடைந்து
அவஸ்தையாக ஆட்டோகாரனின்
வாயில் வளர
'ஓரமா நின்னு ரொமான்ஸ் பண்ணுப்பா'
என முடித்துக் கொண்டு
அவன் விலகி ஓட
சமாதானத்துடன் திரும்பவும்
அவர்களிடம் ஒட்டிக் கொண்டது
சிவப்பில் வளர்ந்த
சிவப்பு
***********************
அவளுடன் காணும் பொங்கல்
செங்கரும்பின் சாறு
செவ்விதழ்களை தாண்டி
வழிந்தோட நீ அடிக்கரும்பை
சுவைக்க ஆரம்பிக்கும்போது
அதை நான் ரசிக்க
ஆரம்பிக்கும்போது
என்ன என என்னைப் பார்க்க
பொங்கல் வாழ்த்துக்கள்
என்றேன் சத்தமாக
துள்ளிக் குதித்து புள்ளிமான்
போல் நீ ஓட
எனக்கான புன்னைகைகள்
வாழ்த்துக்களாக கிடைக்காமல்
திரும்பிக் கொண்டிருக்கின்றேன்
ஆச்சர்யாமாக அடுத்தநாள்
இன்று தானே உனக்கு ஸ்பெஷல்
என நீ எனக்கான புன்னகையில்
எதிர்பார்த்த வாழ்த்துக்கள் கூற
பூம்பூம் மாட்டின் தலையாட்டல்
புதிதாக ஆரம்பிக்கின்றன என்னுள்
காணும் பொங்கலுக்காக
காத்திருக்கிறேன்
கொண்டாட வழிகள் என்ன
நீ சொல்வாய் என?
*****************************
அன்புமனைவியின் மொழிபெயர்ப்புகள்!
வேலையில்லா திண்டாட்டத்தில்
காட்டின் நடுவே
சாவுமேளம் அடிப்பவன்
உச்சஸ்தாயியில்
தனிமையை சங்கடங்களை வலிகளை
அடித்துக் கொண்டிருக்க என
தொடரும் சோகக்
கவிதையின் அடர்த்தியை
காதுகளின் வழியே
என் மனைவிக்கு
மொழிபெயர்த்துக் கொண்டிருந்தபோது
முழுமையாக பத்துநிமிடங்கள்
பொறுமையாகக இருந்தவள்
கைகளின் வழியே என்மீது
மொழிபெயர்க்க ஆரம்பித்தாள்
பதினோராவது நிமிடத்தில்
அந்த இடத்தில் ஆரம்பிக்கிறது
உச்சஸ்தாயியில்
சங்கடங்கள் வலிகள்
தொடரும் இன்னொரு
சோகக் கவிதை
அதன் பாடுபொருளாக
கணவர்கள்
******************
'உரையாடல் சமூக கலை அமைப்பின்' சார்பில் பதிவர்களுக்காக நடத்தப்பட்ட கவிதைப் போட்டிக்காக எழுதப்பட்டது!
அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!!
*******************
வேற்றுகிரகவாசியாக மனைவி!
வீட்டு வேலை
*******************
சகோதரிகள் இல்லா வீட்டில்
அம்மாவின் சத்தம்
விரட்டும் முன்னர்
பரபரவென செய்யும்
தேங்காய்நார் சபீனா
வேளைகளில் விழிக்காமல்
மனைவியின் கொஞ்சல் கெஞ்சல்
அதட்டல்களில் சட்டென
வீராப்புடன் கைகோர்த்து
விழிக்கிறது ஆண்மையின் கோபம்
கையில் 'விம்' கொடுக்கும்போது!
இளம் மனைவி
*******************
உள்ளுக்குள் புதைத்த
காதலையும் காதலியையும்
தாங்கி அந்நியமாகத்
திரியும்போதெல்லாம்
வேற்றுகிரகவாசியாக தெரிகிறாள்
இளம் மனைவி
காதல் தாங்கிய
வெட்கப் புன்னகையில்
என்னை பார்க்கும்போது!
*************************************************
இவள மாதிரி பொண்ணு பாரும்மா?
கொஞ்சும் அழகியின்
கொடி விடும்
மெல்லிய இடை அதனுடன்
ஆண்பிள்ளை திமிரும் உயரமும்
அசரடிக்கும் அழகுடன்
தினமும் சொப்பனத்தில்
வந்து போகிறாள்
அவள் முகரேகைகள் மனதில்
பதியும்முன் கலைகின்றன
அம்மா உடன் திரைப்படம்
சென்றபோது சடாரென
மின்னல்கீற்றின் ஒளியில்
முக, உடல் ரேகைகளில்
முழுதாக அழகாக தெரிந்தாள்
உடனே அம்மாவிடம்
இவள மாதிரி பொண்ணு பாரும்மா?
“டேய் இவ நவி’டா
வால் வேற இருக்கு”
*****************
ஸோ, நானும் ’அவதார்’ பார்த்துவிட்டேன். அதன் பாதிப்பு தான் மேலே.
*****************
கண்ணாமூச்சி நேரங்கள்
சிறகுகள் தொலைந்த
பறவை பதறி இருப்பிடம்
தேடும்போது ஆடும்
இருப்பிடம் போல் இருக்கும்
ஒடுங்கிய கூடாரம்
பெருத்த குடிகாரன்
தவழ்ந்து தவழ்ந்து
தேடும் போது ஆடும்
கூடாரம் கூட தேடிக் காணாத
இடத்தில் எரிபொருள்
போக காத்திருக்கும்
வயது பெண்
அபலநிலையுடன்
கடிகாரம் தட்டித்
தேடும் போது ஆடும்
என்னைப் போல்
காதலியைத் தொலைத்தவன்
வாழ்வைத் தொலைத்து
தேடும் போது ஆடும்
கண்ணாமூச்சி நேரங்கள்
என்றும் ஓய்வதே இல்லை
********************************
காதல் எனும் மன்மதன்!
அவள் வரும் முன்பு
அடுக்கி வைக்கப்பட்டு சீராக
அழகாக இருந்த அலமாரிகள்
வந்து சென்ற பின்பு
அங்கொன்றும் இங்கொன்றுமாக
சாய்ந்து நிமிர்ந்து
சரிந்து கிடக்கும் மது கோப்பைகளுடன்
முன்பும் பின்பும்
அதே ஆள்
அழகிய முள்தாடிகள் மட்டும்
அந்நியன்
செத்தவன் மீண்டும்
மண்ணில் எழுவதைப் போல்
பன்மடங்கு அபூர்வம்
ஒதுக்கிய காதலி
கரம் மீண்டும் பற்றி
கண்ணீரால் நனைக்கும்
காதல் வாழ்க்கை
*************************
முத்தமிடத் தெரியுமா?
அழுக்கு சகோதரி
*********************
போக்குவரத்து நெரிசலில்
எதிர் வாகன பெண்ணின்
மடியில் சிரிக்கும்
குட்டிகவுன் அழகியின்
பொக்கைவாய்க்கு
ஓரக்கண் சிமிட்டல்களும்
பறக்கும் முத்தமும்
பழிப்பு சிரிப்பும்
பரிசளிக்கும்போது
கண்ணாடியைத் தட்டி தட்டி
கவனம் கலைக்கிறாள்
அவளின் ஒன்றுவிட்ட
அழுக்கு சகோதரி
மாமனாரின் மகள்
*********************
நான் எப்போதும்
தூதுவிடும் சுரிதார் பெண்
ஒவ்வொரு முறையும்
கண்டுகொள்ளாமல் புறம்
ஒதுக்கிவிடும் பொழுதெல்லாம்
யோசிக்க வைக்கிறாள்
ஊரில் இருக்கும்
மாமன் மகனை
மனதில் வைத்திருக்கிறாளோ?
வேறு வழியில்லாமல்
எதிர்ப்படும்
ஒவ்வொரு பெண்ணின்
முகத்திலும் தேடுகின்றேன்
முகமறியா
மாமனாரின் மகளை
முத்தமிடத் தெரியுமா?
************************
வெட்கப்படத் தெரியுமா
என் கேள்விக்கு
வெட்கத்தில் சிவந்து கொண்டே
வெட்கத்தைப் பதிலாக
தரும் உன்னிடம்
ஈர உதடுகளை
ஈரப்படுத்திக் கொண்டு
கேட்கத் துடிக்கிறேன்
முத்தமிடத் தெரியுமா?
*********************************
தண்ணீரைக் காதலிக்கும்...
வாழத் தான்
வேண்டியிருக்கிறது
எந்நேரமும் போதையில்
தண்ணீரில்
தூக்கமிழந்து துடுப்புகளை
சிறு உணவுதுண்டுக்காக
இந்த பொல்லாத வாழ்க்கையில்
அசைத்து அப்படியும்
வாழத் தான்
வேண்டியிருக்கிறது
எதிரிகளின் நயவஞ்சக
தூண்டிலில் சிக்காமல்
எப்படித் தான் வாழ்ந்தாலும்
ஒரு நல்ல நாளில்
சிக்குகிறேன்
எதிரி எமனாகிறான்
வேறொரு கெட்ட நாளில்
எமன் எதிரியாகிறான்
அதுவரையிலும்
வாழத் தான்
வேண்டியிருக்கிறது
நாலுபக்கமும் தண்ணீர்
தீவுக்குள் இருந்தாலும்
கவலையில்லை
தண்ணீரில் மிதக்கும்வரை
இருக்கும்வரை
இறக்கும்வரை
அதுவரையிலும்
வாழத் தான்
வேண்டியிருக்கிறது
அறிவுகளின் கூட்டல்
கழித்தலில் எத்தனை
மிஞ்சியிருந்தாலும்
வித்தியாசமில்லா வாழ்க்கையில்
கண்ணாடி கூண்டில் நீ
நீந்திக் கொண்டு
கண்ணாடி கூண்டில் நான்
கம்ப்யூட்டர் முன் செத்துக் கொண்டு
இருந்தாலும், God damn
வாழத் தானே
வேண்டியிருக்கிறது!
டிஸ்கி: "யோவ் என்னய்யா இது? சுத்தமா புரியல" என சொல்லுபவர்களுக்கு நான் இந்த கவிதையை(?) டெடிகேட் செய்கிறேன்.
**************************************
முத்த யாசகன், சொன்னவன் கடவுள்
முத்த யாசகன்!
உன் இதழ்களில்
மூச்சு வாங்கும்
முத்த மிச்சங்களையும்
மிச்ச முத்தங்களையும்
மொத்தமாக யாசகம் பெற
முடியாமல்
முடியாமலே இருக்க கூடாதென்ற
முடிவில் உனக்காக இந்த
முத்தக் கவிதை என்
முத்தங்களுடன்!
......................
ரகசியங்களின் ரகசிய உரையாடல்!
இதயம் எகிறி துடித்து
மின்சாரம் காதுகளில் பரவ
பரவசத்தில் லேசாக
வேர்வை வெளிறி
கண்களில் அவசர அலைபாய
நாக்கு வறண்டது
நல்ல வேளை இரண்டு
நிமிடத்தில் முடித்துவிட்டாள்
ரகசியங்கள் காதருகில்
சொல்லப்பட வேண்டுமென
சொன்னவன் கடவுள்
தினந்தந்தியின்
தலைப்பு செய்திகளை உன்
தலையின் கற்றை முடிகள்
தாண்டி நான் சொல்ல
நினைத்தபோது
நாக்கு தந்தி அடித்தது
யார்ட்லியோ லாவண்டரோ என
மூக்கு வியர்த்தது
ரகசியங்கள் காதருகில்
சொல்லப்பட வேண்டுமென
சொன்னவன் கடவுள்
**************************************
மனைவியின் சிநேகிதன்(?)
பதிவர் ப்ரியா அவர்கள் ஒரு கவிதை, அதாவது கணவனின் சிநேகிதி(?) என்ற பெயரில் பதிவிட்டார். உடனே, பதிவரும், நண்பருமான ராஜி என்கிற ராஜலட்சுமி உடனே பதில் எதிர் கவிதை எழுத வேண்டும் என்று கொலைவெறியுடன் யோசித்தார். ஆனால், அவரின் கவிப்புலமையுடன் கம்பேர் பண்ணினால் இது ஜூஜூபி அதாவது தூசி போல. அதனால் அந்த வேலையை என்னிடம் கொடுத்தார்.
ஏதோ என்னால் முடிந்த அளவு யோசித்ததில், இதோ கவிதை தயார். கூடவே, இதனால் சகலமானவர்களுக்கும் தெரிவிப்பது என்னவென்றால், இது நான் குத்துமதிப்பாக எழுதியது. இன்னும் கல்யாணமே ஆகாத எலிஜிபிள் பேச்சிலர் நான்(எப்படியெல்லாம் மார்கெட்டிங் பண்ண வேண்டி இருக்கு. ச்சே). ஏதாவது தவறு இருந்தால், மன்னித்தருள்க. மேலும் மேலதிக தகவலுக்கு பதிவர் ப்ரியா அவர்களின் பதிவுக்கு செல்லவும்.
ஓவர் டூ கவிதை OR கவிதை மாதிரி ஒரு கிறுக்கல்!
புதிதாக வந்தவனின் ப்ளேசர்
திடீரென நினைவுபடுத்தியது
பரணில் போட்ட
வாழ்வின் முதல் நிச்சயதார்த்த ப்ளேசர்
ட்ரிம் மிலிட்டரி உடல்
தனியாக ட்ரெயினர் வைத்து
ஜிம்மில் எக்சர்ஸைஸ் செய்வானோ?
ஜாகிங் ஓடவேண்டும் ஹூம்ம்
வேற வழியில்லை
X Men Wolverine பற்றி
அவர்கள் பேசிக் கொண்டபோது
"போப்பா, Undertaker தெரியாதா?"
என மகன் கேட்டது
அவசரமாக நினைவில்
சானியா மிர்சா தாண்டி தெரியாத
டென்னிஸில் ஃபெடரரா, நடாலா என
பந்தயம் கட்டிக் கொண்டு அவர்கள்
பார்த்த போது பஞ்சர் ஆனது
எனது 20-20 மேட்ச் லைவ்
"இன்னிக்கி சன்டே டீம் லஞ்ச் வெளில"
அவன் காலையில்
கால் பண்ணி நினைவுபடுத்தும்போது
என் உப்புமாவுடன் நானும்
ஹாட்பாக்ஸில் சூடாக!
***********************************
கண்ணசைவில் மட்டும்!

சில நேரங்களின்
சிநேகமற்ற உஷ்ண பார்வைகளிலும்
பல நேரங்களின்
சிநேக புன்னகைகளிலும்
சில நேரங்களின்
ஓயாத பேச்சுகளிலும்
பல நேரங்களின்
அடம்பிடிக்கும் கண்ணீர்களிலும்
சில நேரங்களின்
அதிகார திமிர்களிலும்
இன்னும் பல சில நேரங்களின்
பல பல அர்த்தங்கள்
புரியாமல் புரியாமலே இருந்தாலும்
உன் சிறு கண்ணசைவு
பார்வையின் பரிணாமங்களை உடனே
பற்றிக் கொள்கிறேன்
கட்டிலில் மட்டும்!
*******************************
வாளிப்பான காதல்!
வாரி கட்டிக் கொள்ளும்
குழந்தையைப் போல்
கதவைத் திறந்ததும்
ஒவ்வொரு முறையும் என்னை
வாரிக் கட்டிக் கொள்ளும்
வாளிப்பான காதல்!
சிவப்பு பட்டாசு வெடியின்
சிவப்பு மருந்து காத்திருக்கும்
சின்ன நெருப்பு போல்
என்னுள் புதைந்து இருப்பது வெடிக்கக்
காத்துக்கொண்டிருக்கும் உன்
கண்ணசைவின் சம்மதம்!
கோடை கால தண்ணீர் தீர்க்கும்
தாகம் மீண்டும்
தாகம் தூண்டும் போல்
தாபம் மீண்டும்
தாகம் தூண்டும்
தீ நீ!
தனிமையின் துணையில்
தலையணை அணைக்கும் மனம்போல
அணைக்க தவிக்கும் மனம்
ஏங்கும் தலையணை
உன் மெத்தை!
இவை யாவும்
உள்ளமும் உள்ளம்
சார்ந்த காதல் அன்று
உடல் ம் டல் சார்ந்த
கா ம்!
***********************
சுட சுட இரண்டு கவிதை!

முன்னால் சென்றவனின்
பின்னால் உட்கார்ந்து
போன சுரிதார் பெண்ணின்
இரண்டு முழ மல்லிகை
மகரந்தம்
மறுபடியும்
சொல்லிவிட்டு
போகிறது
உன் பிரிவை
பரபரப்பான சாலைகளின்
பேரிரைச்சல் இடையிலும்
*****
இறந்த காலத்தின் கேள்விகள்
சுழற்றி அடித்து என்னை
என்னுள் தேடிக் கொண்டிருக்க
நிகழ் காலத்தின் கேள்விகள்
ஏளனச் சிரிப்புடன்
எள்ளி நகையாடுகின்றது
இறந்த இறந்த காலத்திற்கான
பதில்களின் வடிவம்
பதியும்போது
கேள்விகளின் வண்ணம் மங்கி
கேள்விக்குறி புதிதாய்
முளைக்க
இறந்த காலத்திற்கு சென்ற
நிகழ் காலத்தின் கேள்விகளில்
இன்னும் கேட்கிறது அதே
ஏளனச் சிரிப்பு!
*********************
தீபா..வளி...வலி!
உனக்கு என் மீது காதலா
உன் கேள்விக்கு
இல்லை பைத்தியம்
என என் பதிலை
நீ எதிர்பார்க்கவில்லை
நானும்
நீ ரசிப்பாய் என
நீ ஏன் கவிதையாக
பேசுகின்றாய்
ஆச்சர்யமில்லை தினமும்
குற்றாலத்தில்
குடியிருப்பவன் அருவியில்
குளிப்பது
நீ
கலகலவென சிரிக்கும் சப்தம்
வித்தியாசமில்லை
அருவி நீர் கொட்டும் சப்தம்
அவன் அடிக்கடி கேட்பது
முடியல சாமி
முடிவே இல்லையா
உன் கவிதை கதறலுக்கு
என்ற உன் கதறலுக்கு
நான்
ஒரு வேளை
இருக்கலாம்
மரபுக்கவிதை எனது
புதுக்கவிதை ஆனவுடன்
ஹைக்கூ கவிதை
பிறந்தால்?
என் பதில்
முடிந்தகணத்தில்
மரபு புதுசாக மாற
துடித்தது
தவித்தது
ஒரு நாள் மட்டும்
இல்லை
365 நாட்களும்
தீபா உன்
உடன்
தீபாவளி
மெல்லவும் முடியாமல்
விழுங்கவும் முடியாமல்
தவித்த மாதிரியான
சூழ்நிலையில்
நினைக்கவில்லை
உன்னை
சந்திப்பேன் என்று
சில சொற்களுக்கே
சோதனை என்கிறபோது
வார்த்தைகள் வரம்
வரம் வாங்கி வரைந்தேன்
நினைவுகளின் வட்டம்
விட்டம் பெரிதாகி
கடந்த கால
காதல் வாழ்க்கையின்
மையத்தில் என்னை
விட்டது
எத்தனை கவிதைகள்
தீபா
தீபாவளி தீபா'வலி'யாக
உடைந்த ஒரு நாளில்
இருந்து
இன்று வரை
ஒரு நாள் மட்டும்
இருந்தது
ஒரு நாளும் இல்லை
என் வாழ்வில்
டிஸ்கி: இந்த கவிதை(அடடே, சொல்லவே இல்லை) எழுதியதில் இருந்து தீபாவளி செலிப்ரேஷன் மூடே போச்சு. :( ஹெல்ப் மீ..
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள் அனைவருக்கும்!
***************************************
காத்திருக்கிறேன்!!
திருவிழாவில்
தொலைந்த
குழந்தையின்
கண்கள் தேடும்
பெற்றோர்
கடைசி பேருந்தை
கணத்தில் தவறவிட்ட
ஒருவனின் கண்கள்
தேடும் அவசர உதவி
தேர்வு முடிவுகள் நாளிதழில்
தேர்வு எண்
தேடும் சராசரி
மாணவன்
என மனத்திரையில்
ஒருவர் பின் ஒருவர்
கடந்து செல்லும்
அபத்த சூழ்நிலையில்
வெளி அழைப்புகள்
செல்லாத
செயலற்ற
அலைபேசியில் உன்
அழைப்புக்காகக்
காத்துக்
கொண்டிருக்கின்றேன்
கண்மணியே!!
**********************
பதின்பருவத்து நெருப்பு!

புருவ வளைவுகளை
நேர்த்தியாக செதுக்கி
சுண்டி இழுத்தவளிடம்
விழுந்த மனம்
மதியத்தில் தெற்றுப்பல்
மாலாவிடம் தெறித்த
சிரிப்பில் சிக்கியது
ஒரு வழியாக
வீட்டிற்கு வந்தால்
முறைப் பெண்
புதிதாக இளமையாக
அழகிய தாவணியுடன்
வந்ததும் அதன்
அவள் மடிப்பில்
மடிந்தது
*
*
*
இப்படியான எனது
பதின் பருவத்து
காதல் நெருப்பு
ஒருவர் கை மாறி
ஒருவர் கை செல்லும்
ஒலிம்பிக் தீபம்
போல் அணையாமல்!
******************************