என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாரும் என்னை பார்த்து கேட்பார்கள். படத்தை அப்படி முதல்நாளே பார்க்கலேன்னா என்ன, பொறுமையா பார்க்க வேண்டியது தான? என்று. நான் சொல்லுவேன், சிலருக்கு கதை தெரிந்து நல்லா இருந்தால் மட்டுமே போவார்கள். ஆனால் சிலருக்கு எந்த விதமான முன்கதை சுருக்கமும் தெரியாமல் முதல் நாளே பார்க்கும்போது, ஒரு வித த்ரில் இருக்கும். அந்த த்ரில்லை ரசிப்பார்கள். நான் அப்படிப்பட்ட ஆள் என்று கொஞ்சம் பெருமையாக சொல்லுவேன்.
அதை கொஞ்சமும் ஏமாற்றாமல், அநியாயத்திற்கு த்ரில்லின் உச்சியில் கொண்டு போய் உட்கார வைத்த படம் "ஈரம்". அதிலும் அந்த முன்பாதியில் வரும் மூன்று கொலைகள். மூன்று கொலைகளிலும் டாப், தியேட்டரில் ஒருவன் சைக்கோ போல், கண்ணாடியில் ரொம்ப வேகமாக முட்டி ரத்தம் தெறித்து சாகும் காட்சி. சீட்டின் நுனிக்கு வந்து விட்டேன், ஏ.சியிலும் வேர்த்துக் கொட்டியது. அதற்கு காரணம் மிரட்டலான பிண்ணனி இசை, மற்றும் கேமரா வொர்க்.
அதே போல், மென்மையான காதலும் எனக்கு பிடிக்கும். காதலும் இந்த படத்தின் அடிநாதமாக தொட்டு செல்கிறது. ஃப்ரெண்ட்ஷிப் அண்ட் லவ் ரிலேஷன்ஷிப் என்று நாயகி காதல் பற்றி சொல்லும் காட்சி, கவிதை. நாயகி, பக்கத்துவீட்டு பெண் போல ரொம்ப மொக்கையாகவும் இல்லை, டிபிக்கல் ஹீரோயின் மாதிரி அந்நியமாகவும் இல்லை. ஒவ்வொரு இளைஞனும் (நானும்) காதலிப்பதற்காக மனதில் கற்பனை பண்ணி வைத்து இருக்கும் அழகான திருத்தமான முகம். அதிலும் நாயகியின் க்ளோஷ் அப் காட்சிகள், அவ்வளவு அழகு. என்னுடைய லேப்டாப்பின் ஸ்கிரீன்ஷேவர் இனிமேல் அவர் தான். அழகாக சிரிக்கும்போது, ஹரிணி (ஜெனிலியா)வை நியாபகப்படுத்துகிறார். சுரிதாரில் அழகாக நடந்து வரும்போது அவ்வளவு பாந்தம். I love her.
சில சொத்தை படங்களை பார்க்கும்போது "என்னடா லாஜிக், நம்புற மாதிரியே இல்ல" என்று மோசமான திரைக்கதையால் அடிக்கடி நினைவில் கொண்டு வந்து வெறுப்பேற்றுவார்கள். ஆனால் இந்த படத்தின் விஷேசம், திரைக்கதை. திரைக்கதையில் லாஜிக்கை மறக்கடித்து விடுகிறார்கள். படம் முடிஞ்சாலும், கொஞ்சம் நம்புறமாதிரி தான் இல்ல ஆனால் படைப்பாக வெளிக்கொண்டு வந்த நேர்த்தி மிகவும் அட்டகாசமாக உள்ளது என்று படம் பார்க்கும் ஒவ்வொருவரையும் சொல்ல வைப்பார்கள்.
படத்தின் கதையை சொல்ல வேண்டும் என்றால் ஒரு வார்த்தையில், பழிவாங்கல்.
இன்னொரு மிகச் சிறப்பான அம்சம், வசனம். முன்பாதியில் நாயகன், நாயகியின் அப்பாவுடன் காதலுக்காக பேசும் காட்சி. அதேபோல் வில்லன், பத்திரிக்கை சந்திப்பில் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கும்போது "என்னடா? ஒரே கோல்மாலாக இருக்கிறதே?" என்று யோசிக்கும்போது, "ஒரே" வார்த்தையில் அட போட வைக்கும் திருப்பம். இதையெல்லாம் விட, படத்தின் தலைப்புக்கு நாயகன், அதே சந்திப்பில் கொடுக்கும் விளக்கம். அருமை.
இன்னொரு சிறப்பம்சம், சில இடங்களில் வசனம் எதுவும் இல்லாமல், காட்சி கோர்வைகளிலும், பிண்ணனி இசையிலும் சிறப்பாக புரிய வைத்த இடங்கள். உதாரணத்திற்கு, எதிர் ஃப்ளாட் மாமி காய்கறி வாங்கிக் கொண்டே அள்ளிவிட்ட புரளி, அடுத்த காட்சியில் ப்ளாட் முழுவதும் மொபைல் ரிங்க் டோன், டேண்ட் லைன் கால் சத்தம் மூலம் பரவிவிட்டதாக புரிய வைத்த காட்சி. க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சியில், குத்து வாங்கிய நாயகன் ஒரு நொடியில் வலதை இடமாக மாற்றிவிட்டு, முடியை கோதிவிட்டு வித்தியாசமாக பொத்தி பொத்தி நடக்கும் காட்சி.
இன்னும் கைதட்டல்கள்களை அள்ளிய சில இடங்கள். ஃபிரிட்ஜில் மிரண்டு போய் அடைந்து இருக்கும் இளம்பெண், ஸ்ரீநாத்தை அவர் மகள் மிரட்டும் காட்சி, அந்த தியேட்டர் டாய்லெட்டின் ஒரு மன்மதனின் வித்தியாசமான சாவு.
ஆனால் இவ்வளவு நல்ல விஷயங்கள் இருந்தாலும், கதையை நியாயப்படுத்துவதற்காக இந்த சமூகம் கெட்டு போய் விட்டது என்பதற்காக ஸ்ரீநாத், நந்தாவிடம் அவ்வளவு நீண்ட லெக்சர் கொடுத்து, எல்லாருக்கும் கிலி கொடுக்கும் காட்சி. அவ்வளவு மிகைப்படுத்தி இருக்க தேவையில்லை.
அமானுஷ்யமான விஷயத்தை கையில் எடுத்து, இந்த வருடத்தில் மெகாஹிட்டாக போகும் இரண்டாவது படம். தவற விடாதீர்கள்.
*************************************
ஈரம்
உயிர்கொல்லிகள்!
புகைந்து கொண்டிருந்த
ஏக்கங்களை
உன்னில் கொட்டிய
நொடியில்
உன் கண்களில் தெறித்த
நெருப்பு
திடீரென முளைத்த
ஆறாம் விரலுக்கு
பற்ற வைத்தேன்
நாளொரு பொழுதும்
பொழுதொரு கணமும்
வளர்த்த காதல், முத்தங்கள்
என்னை ஏகாந்த்ததில்
சுழல வைக்கும்
பொழுதுகள்
பொழுதுகளில்
உள்ளே இழுத்த புகையின்
பரிணாம சுழற்சி
உச்சந்தலையை தாக்கி
சுழன்றேன் பின்
நின்றேன்
ஏதோ எவனோ
காரணமாக
சம்பந்தமில்லாதவன்
போல
உதறி எழுந்து
சம்பந்தமில்லாமல்
போன போது
ஒரு நொடியில்
எதுவும்
சம்பந்தமில்லாதது
போல்
உதிர்ந்த புகை சாம்பலின்
பிரிவு
பார்க்கும் காதலர்கள்
பற்ற வைக்கும்
நினைவலைகளின்
ரணம்
தொடர்ந்து வந்து
விட்டாலும் எவன்
கையில் கண்டவுடன்
உடனே
பற்ற வைக்க
ரணம்
நீ விட்டு சென்ற
காதலின்
நினைவலைகள்
மட்டும் என்றும்
அழியாமல்
நெஞ்சில் தங்கி
பின்னர்
வெளியே விட்ட
பின்னும்
கொஞ்சம் அழியாமல்
நெஞ்சில் தங்கி
சித்ரவதை
ஒரே வகையில்
ஒரே முறையில்
ஒற்றுமை
இரண்டுமே
உயிர்கொல்லி!
*************************