கல்யாண மண்டபமே களை கட்டியிருந்தது. விடிந்தால் திருமணம். முதல் நாள் இரவில் நிச்சயதார்த்தம் முடிந்து நெருங்கிய சொந்தங்கள் எனப்படும் நாலு இலக்கத்தில் மொய் தீட்டுபவர்கள் ஏ.ஸி கெஸ்ட் ரூமில் தூங்குவதற்கு முன் பாதாம்பால் குடித்துக் கொண்டிருந்தார்கள். வெட்டப்பட்டு சில மணிநேரங்களே ஆன ஃப்ரெஷ் வாழைமரங்கள் குலையுடன் மண்டபத்தின் வாசலில் வந்து இறங்கியது.
அதிகாலை 6 மணிக்கே மண்டபத்திற்கு கூட்டம் கூட ஆரம்பித்துவிட்டது. வினோத், மாப்பிள்ளையின் உயிர் நண்பன், நைட் முழுவதும் டெக்கரேஷன், அதிகாலையில் விருந்தினர்களுக்கு குளிக்க சுடுதண்ணீர், குடிக்க காஃபி என சகல வேலைகளையும் இழுத்து போட்டு செய்து கொண்டிருந்தான். வீட்டில் வெட்டியாக ஈஸி சேரில் உட்கார்ந்து ஹிண்டு பேப்பரை படித்துக் கொண்டிருக்கும் ரிட்டையர்டான காலனி தாத்தாக்கள் எல்லாரும் முதல் வரிசையில் உட்கார்ந்து கொண்டு சுகர் இல்லாத காஃபி கொண்டு வர சொன்னார்கள். வினோத், கிச்சனில் அவர்களுக்கு காஃபி கொடுக்க சொல்லி ஒரு பையனை அரேன்ஞ்ச் பண்ணி திரும்பும்போது தான் பார்த்தான்.
கோவப்படாமலே சிவக்கும் கன்னங்கள், ஸ்ட்ரெயிட்டனிங் பண்ண தேவையில்லாத சீரான முடி, ஸ்லீவ்லெஸ் சுடிதார், அளவான திருத்தமான முகம், ஒல்லியான தேகம் என தேவதை மாதிரி இருக்கும் அவளை முதன்முதலாக பார்த்தான். பார்த்த அந்த நொடியில் அவன் மனதை பறிகொடுத்தான். நேரில் சென்று அவளுக்கும் அவளுடன் நின்று இருந்த இரண்டு தோழிகளுக்கும் காஃபி கொடுக்க வேலைக்கார பையனுடன் கொடுத்தான். பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.
வினோத், கீர்த்தியின் தோழிகளைப் பார்த்தான். நிஷா, ரொம்ப கறுப்பாகவும், ஃபேர் & லவ்லி பயன்படுத்தி முகத்தை மட்டும் சிவப்பாக்க முயற்சி செய்தவளை அவளின் நீளமான கை ஒரிஜினல் கலரை காட்டிக் கொடுத்தது. ஆனால் மதுரை பெண்களுக்கே உரிய ஆளுமை அவளிடம் இருந்தது. வித்யா, இவளும் கறுப்பு தான், ஆனால் நிஷா அளவு இல்லை. கொஞசம் களையாகவும், சிரிக்கும்போதும் அழகாக இருந்தாள்.
கல்யாணம் முடியும் வரை அவர்களை ஸ்பெஷலாக கவனித்துக் கொண்டான். மொபைல் நம்பர் பரிமாற்றங்கள் நடந்தன. மதிய உணவு சாப்பிடுவதற்காக மூவரும் வினோத்துக்காக வெயிட் பண்ணியது, அவனை பறக்க செய்தது. கீர்த்திக்கும், தன் மேல் சாஃப்ட் கார்னர் இருப்பதாக இமயமலை அளவு நம்பினான். கீர்த்தியுடன் பேசிக் கொண்டிருக்கும்போது மண்டபத்தில் இருப்பவர்கள் அனைவரும் இவனை பொறாமையுடன் பார்த்துக் கொண்டிருப்பதாக எண்ணி கர்வப்பட்டான்.
கல்யாணம், களேபரம் எல்லாம் முடிந்து இரண்டு வாரங்களுக்கு பிறகு வினோத், கீர்த்திக்கு கால் பண்ணி, "எங்கேயாவது மீட் பண்ணலாமா?" என்றான். அவள், "இப்போ முடியாது, வீக் எண்ட் பார்க்கலாம்" என்றாள்.
சரியாக சனிக்கிழமை காலை 9 மணிக்கு, திரும்ப கால் பண்ணி, அதே கேள்வியைக் கேட்டான் வினோத். அவள், "ஒகே. 11'o clock Spencer plaza வந்திடு" என்றாள். பலநாள் மனதில் தேக்கி வைத்து இருந்ததை எப்படியாவது இவளிடம் சொல்லிவிட வேண்டும் என்ற முடிவுடன் அங்கே போனான். அங்கே இருந்த ரெஸ்டாரென்டில் அவள் ஃப்ரெண்ட்ஸ் 5 பேருடன் சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இவனும் ஜாயின் பண்ணிக் கொண்டான். பஃபேயில் அவள் டிஷ் எடுக்க செல்லும்போது கடைசியாக அதை சொல்லியே விட்டான். அவள் இந்த மாதிரி ரியாக்ட் பண்ணுவாள் என்று அவன் நினைத்து பார்த்தது கூட இல்லை.
அவள் ஒரு பெரும் சிரிப்பு சத்தம்போட்டு சிரித்து, அவள் நண்பர்களுடன் சேர்ந்து வினோத்தை எள்ளி நகையாடினாள். "எதை வச்சி நீ இப்படி எல்லாம் பேசுற? என்ன நான் அழகா இருக்கேனா? உன்ன போனாபோகுதுன்னு லஞ்சுக்கு இன்வைட் பண்ணா இப்படி காமெடியெல்லாம் பண்ற?" என்று கீர்த்தி, பாய்ஃப்ரெண்டின் மடியில் உட்கார்ந்துகொண்டே சொன்னாள். கீர்த்தி காதலை ஏற்றுக் கொள்ளாததை விட அவள் இப்படி அசிங்கப்படுத்தியது அவனை மிகவும் வெட்கப்பட வைத்தது. அந்த இடத்தை விட்டு உடனே வெளியேறிவிட்டான்.
ஒரு பெண்ணால், ஒரு கூட்டத்தின்முன் ஏற்பட்ட இந்த அவமானத்தை அவனால் அவ்வளவு எளிதில் மறக்க முடியவில்லை. அது சம்பந்தமேயில்லாமல், அவன் காலேஜில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்தியது. ஒரு ஜூனியர் பெண், இவனிடம் கேண்டீனில் வைத்து ப்ரோப்பஸ் பண்ணியபோது, வினோத் அவளை எல்லார் முன்னிலையிலும் வைத்து திட்டிய சம்பவம். அப்போது அவன் சொன்னது, "உன் மூஞ்சிக்கு என் மேல ஆசையா? உன்ன மாதிரி ஆளுங்க யார்கிட்டயும் ப்ரோப்பஸ் பண்ணாதீங்க.. எவனாவது தெரியாத்தனமா உன்கிட்ட "ஐ லவ் யூ" சொன்னா உடனே ஒத்துக்கோ. அவனை மாதிரி வேற எவனும் மாட்ட மாட்டான். இனிமே உன்ன எங்கேயாவது பார்த்தேன்... அப்படியே திரும்பி பாக்காம ஓடிப் போயிடு" என்றான் கடுப்பாக. அவள் இதனால் டிஸ்கன்டினியூ ஆனபோதும் நண்பர்களுடன் கூடி சிரித்தான்.
இப்போது அவனால் காதல் நிராகரிப்பின் வலியை புரிந்து கொள்ள முடிந்தது. மிகவும் வருந்தினான். யாராவது என்ன ஏது என்று கேட்டால் அழுதுவிடும் மனநிலையில் இருந்தான். இரவு 12 மணி வரை அவனுக்கு தூக்கம் வரவில்லை. ஸ்விட்ச் ஆஃப் ஆகியிருந்த செல்ஃபோனை ஆன் பண்ணினான். வரிசையாய் 4 SMS. மூன்று மார்க்கெட்டிங் SMS Aircelலிடம் இருந்து. நாலாவது "I Love you, Vinoth. Can i call you?" வித்யாவிடம் இருந்து 10.45PMக்கு வந்து இருந்தது.
மலர்ச்சியுடன், வித்யாவுக்கு கால் பண்ணினான் வினோத்.
***********************
ஒபாமாவை வைத்து ஃபேர் & லவ்லி கொடுத்து இருக்கிற ad பார்த்து இருக்கீங்களா? அநியாயம். கீழே.
உன் மூஞ்சிக்கு என் மேல ஆசையா?
Labels:
சிறுகதை
Subscribe to:
Posts (Atom)