உன்னை ரசிப்பதால் வாழ்கிறேன்!


வீணையும் பிடிக்கும்
கிதாரும் பிடிக்கும்
பார்க்கும், கேட்கும் ஒவ்வொரு
முறையும் அது உன்னை தெரிவிக்கும்
அதை இர‌ண்டும் மீட்ட‌த் தெரியாம‌ல்
விழிக்கிறேன், உன்னையும் சேர்த்து
ஒருவேளை அத‌னால் தான் பிடிக்குதோ!

திறந்த கதவின்வழி தென்றல் வருவதில்லை
வரும் தென்றலை ரசிக்க முடிவதில்லை
சில‌ விநாடிகளுக்கு மேல்
சாளரத்தின் இடுக்குகளில் கசியும்
சுகந்தம் உயிரை உருக்கும்
என்னை உன்னில் மீட்டும்!

பின்னிரவு ப‌னியும் பிடிக்கும்
அடைம‌ழையும் பிடிக்கும்
இர‌ண்டையும் ர‌சிக்க‌ முடியும்
தூர‌த்தில் இருந்து மட்டும்
இதன் ஏகாந்தத்தை முழுமையாக
அனுபவிக்க எப்போதும் வேண்டும்
உன் நினைவுகள்
உன்னை ரசிப்பதால் வாழ்கிறேன்
ஒவ்வொரு நொடியும்
உன்னை ர‌சிக்கும் மனதின்
ப‌ண்ப‌ட்ட‌ தொட‌ர்புகள் இவை
இவை ம‌ட்டும‌ல்ல
தொட‌ர்புகள் நீளும், அவை
முற்றுபெறாத‌ க‌விதையின்
முதல் பக்கமாக‌ ம‌ட்டுமே
எப்போதும்!

உன்னைப் பற்றி தோன்றும்
கிறுக்குத்தனங்களும் எழுதும்போது
கவிதையாக கை கால் முளைத்து
உயிர்பெறும் ஆச்சரியம்
புரியவில்லை,
ஆனால்
ஒன்று மட்டும் தெரியும்
கவிதைகளை கிறுக்கும்
எவருக்கும் விடைதெரியாது
இந்த ஆச்சரியத்திற்கு!

பார்க்கும் ஒவ்வொன்றிலும்
உன் நினைவுகள்
என் பார்வையே உன்னுள் ஊடாக
தான் வெளியே செல்கிறது
விழியில் உன்னை இருத்திவிட்டாயோ
என குழப்பம், ஆனந்த குழப்பம்
ஒருவேளை அதனால் தான்
உன் நினைவுகளோ
பார்க்கும் ஒவ்வொன்றிலும்
உன் நினைவு தொடர்புகளின்
சிறகுகள் என்னை விட்டு
உதிர்ந்த நாட்களில்
என் பெயர் பிணம்!

******************

2 comments:

கார்த்திகைப் பாண்டியன் said...

காதலின் வாசம் வீசும் கவிதை.. அருமை நண்பா..

Unknown said...

அருமை :))

Related Posts with Thumbnails